
142 ரன்கள் இலக்கு
இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத், 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிதான டார்கெட்டை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணி தொடக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. புவனேஷ் குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே அட்டகாசமான பவுண்டரி அடித்து ஆட்டத்தை துவக்கிய கேப்டன் கோலி, அதே ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். பிறகு, மீண்டும் ஒன் டவுன் களமிறக்கப்பட்ட டேனியல் கிறிஸ்டியன், மீண்டும் பெரும் ஏமாற்றம் அளித்தார். கடந்த போட்டியில் ரன்னே எடுக்காமல் அவுட்டான கிறிஸ்டியன், இப்போட்டியில் ஜஸ்ட் 1 ரன் மட்டும் எடுத்து, கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால், 18 ரன்களுக்கெல்லாம் அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.

153 கி.மீ வேகம்
இதன் பிறகு, ஜம்மு & காஷ்மீர் ஃபாஸ்ட் பவுலர் உம்ரான் மாலிக் தனது முதல் ஐபிஎல் விக்கெட்டை கைப்பற்றினார். 12 ரன்களில் ஸ்ரீகர் பரத், உம்ரான் பந்தில் கேட்ச்சாகி வெளியேறினார். ஐபிஎல் தொடரில், உம்ரான் மாலிக் கைப்பற்றும் முதல் விக்கெட் இதுவேயாகும். ஐபிஎல் தொடரிலேயே இதுதான் அவரது இரண்டாவது போட்டியாகும். அவர் வீசிய முதல் ஓவரில், பெரும்பாலான பந்துகள் மணிக்கு 148 கி.மீ. வேகத்தில் பறந்தன. அப்படியொரு வேகமான பவுன்ஸ் பந்தில் தான் பரத் அவுட்டானார். அதற்கு அடுத்து அவர் வீசிய இரண்டாவது ஓவரில் பந்துகள் அனைத்தும் மணிக்கு 151, 152, 153 கி.மீ வேகத்தில் சென்றன. இறுதியில், 4 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் வெற்றிப் பெற்றது.

ஆனந்த கண்ணீர்
இந்நிலையில், மகன் உம்ரான் மாலிக் குறித்து அவரது தந்தை உருக்கமுடன் பேசியுள்ளார். இதுகுறித்து இந்தியா டுடேவிடம் பேசிய தந்தை அப்துல் மாலிக், "என் மகன் 3 வயதாக இருந்தபோது கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டினான். எப்போதும் ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக உருவாக வேண்டும் என்று கனவு கண்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடிய பிளேயிங் லெவனில், அவர் எடுக்கப்பட்டபோது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். டிவி முன்பு உட்கார்ந்திருந்த எனது மற்றும் என் மனைவியின் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது. என் மகன் மிகவும் கடினமாக உழைத்தான். நாங்கள் எப்போதும் அவருக்கு ஆதரவாக இருந்தோம். ஒருநாள் அவர் இந்திய அணிக்காக விளையாடுவார் என்று நம்புகிறோம்.

இறைவனை வேண்டுகிறேன்
இது எங்களுக்கு சாதாரண சாதனை அல்ல. நாங்கள் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வாழ்வாதாரத்துக்கு காய்கறிகள் மற்றும் பழங்களைத் தான் விற்று வருகிறேன். என் மகன் எங்களை பெருமைப்படுத்தியுள்ளான். எங்கள் மகிழ்ச்சிக்கு எல்லையே தெரியாது. லெப்டினன்ட் கவர்னர் கூட எங்களை வாழ்த்தியுள்ளார். எனது மகன் தனது பணியில் தொடர்ந்து சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று உருக்கமுடன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











