நாடு திரும்பிய ரெய்னா
ஐபிஎல்லில் கேப்டன் விராட் கோலிக்கு பிறகு அதிக ஸ்கோர் எடுத்துள்ள இரண்டாவது வீரர் சிஎஸ்கேவை சேர்ந்த சுரேஷ் ரெய்னா. இதுவரை 193 போட்டிகளில் விளையாடி 5368 ரன்களை இவர் குவித்துள்ளார். ஒரு சதத்தையும் 38 அரைசதங்களையும் இவர் எடுத்துள்ளார். இந்த சிசனில் விளையாடுவதற்காக கடந்த 21ம் தேதி துபாய் சென்ற இவர், சில தினங்களில் நாடு திரும்பினார்.
சொந்த காரணங்கள் என ரெய்னா பேட்டி
இதனால் சிஎஸ்கேவில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. சொந்த காரணங்களால் ரெய்னா நாடு திரும்பியதாக கூறப்பட்டது. தோனியுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிஎஸ்கேவிலிருந்து விலகியதாகவும் குறிப்பிடப்பட்டது. இதற்கேற்றாற்போல சமீபத்தில் அவர் அளித்த பேட்டிகளில் சிஎஸ்கேவில் பயோ பபள் முறை சிறப்பாக இல்லையென்றும் தான் ரிஸ்க் எடுக்க முடியாது என்றும் கூறியிருந்தார். மேலும் சொந்த காரணங்களுக்காக திரும்பியதாகவும் மற்றொரு பேட்டியில் குறிப்பிட்டார்.
மறுத்துவரும் ரெய்னா
ஆயினும் சிஎஸ்கே கேப்டன் தோனியுடன் ஏற்பட்ட பிளவு காரணமாக நாடு திரும்பியதாக கூறப்படுவதை ரெய்னா மறுத்து வருகிறார். மேலும் அணியில் தான் மீண்டும் இணைய விரும்புவதாகவும் தன்னுடைய ஆவலை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் பிசிசிஐ அவருக்கு உதவி புரியுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
மனஉளைச்சல் காரணம்?
இதனிடையே, ரெய்னா சிஎஸ்கேவிலிருந்து விலகியதற்கான உண்மை காரணத்தை பிசிசிஐ பரிசீலிக்கும் என்று அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.சொந்த காரணங்களுக்காக விலகியிருந்தால் அது அவரது சொந்த பிரச்சினை. தோனியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக விலகியுருந்தால் அது அணியின் உள் விவகாரம். மனஉளைச்சல் காரணமாக விலகியிருந்தால் அது உளவியல் பிரச்சினை. அவர் மனஉளைச்சல் காரணமாக விலகியிருந்தால் அதை அப்படியே விட்டு விட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ உதவ மறுப்பு
இவையன்றி வேறு காரணமாக இருந்தாலும் அதுகுறித்தும் பிசிசிஐ பரிசீலிக்கும் என்றும் அந்த அதிகாரி கூறினார். மனநெருக்கடி காரணமாக அவர் அணியிலிருந்து விலகியிருந்தால் அதுகுறித்து நிபுணர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள் என்று கூறியுள்ள பிசிசிஐ, ரெய்னா இத்தகைய உதவியை நாடினாரா என்பது குறித்து தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த விவகாரத்தில் ஒரு தெளிவு கிடைக்காதவரையில் ரெய்னாவை ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதில் பிசிசிஐ உதவாது என்பது தெரிகிறது.