லண்டன் : 2019 உலகக்கோப்பை தொடரில் மழையால் போட்டிகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இதுவரை மூன்று உலகக்கோப்பை லீக் போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. இதனால், ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
சிலர், உலகக்கோப்பை போட்டியை வெல்லப் போவது எந்த அணியும் இல்லை. மழை தான் எனக் கூறி கிண்டல் செய்து வருகின்றனர்.
2019 உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. அந்த நாடுகளில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கருப்பு நிற பேட்ச்.. வாடிய முகம்.. களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பாக். வீரர்கள்.. உருக்கமான காரணம்!
பாகிஸ்தான் - இலங்கை, தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் - இலங்கை என மூன்று லீக் போட்டிகள் மழையால் கைவிடப்பட்டு, அந்த அணிகளுக்கு, தலா ஒரு புள்ளி கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம், 16லீக் போட்டிகளில் மூன்று போட்டிகள் கைவிடப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில போட்டிகள் மழையால் பாதிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது.
உலகக்கோப்பை போட்டிகள் மழையால் தடைபடுவதால், தொலைக்காட்சியில் பார்க்கும் ரசிகர்களை விட, நேரில் பார்க்க வரும் ரசிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். உலகக்கோப்பை போட்டிகளை காண பல ரசிகர்கள் நாடு கடந்து இங்கிலாந்து சென்றுள்ளனர்.
அப்படி நாடு கடந்து போட்டிகளை காண வரும் ரசிகர்கள், டிக்கெட்டுக்கு மட்டுமின்றி, வெளிநாட்டு பயணத்துக்கும் அதிகம் செலவழிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. அத்தனையும் கடந்து, கிரிக்கெட் போட்டியைக் காணச் செல்லும் அவர்கள், மழையால் போட்டிகள் நடக்காமல் போவதை கண்டு பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த கஷ்டத்திலும் அந்த ரசிகர்களுக்கு ஒரே ஒரு ஆறுதல், இதுதான். உலகக்கோப்பை டிக்கெட்களுக்கான ஐசிசி விதிப்படி, மழையால் உலகக்கோப்பை போட்டிகள் கைவிடப்பட்டால், டிக்கெட் பணம் திரும்ப கொடுக்கப்படும். 15 ஓவர்கள் அல்லது குறைவாக வீசப்பட்ட நிலையில் போட்டி கைவிடப்பட்டால், முழு டிக்கெட் பணமும் திரும்ப ஒப்படைக்கப்படும்.
15.1 ஓவர்கள் முதல் 29.5 ஓவர்கள் வரை வீசப்பட்ட நிலையில் போட்டி கைவிடப்பட்டால், டிக்கெட் விலையில், 50 சதவீதம் திரும்ப கொடுக்கப்படும் என ஐசிசி கூறியுள்ளது. ஒருவேளை போட்டி 30 ஓவர்களை தாண்டிய பின் கைவிடப்பட்டால், ரசிகர்களுக்கு டிக்கெட் பணம் கிடைக்காது.
ஆனால், ரசிகர்களுக்கு இதை மீறியும் கடும் நஷ்டம் ஏற்படும் என்பதே உண்மை. பலரும், ஐசிசி மழையால் போட்டி கைவிடப்பட்டால் போட்டியை மற்றொரு நாளில் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சிலர் மைதானங்களில் மேற்கூரை அமைத்து மழையில் இருந்து ஆடுகளத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கூறி இருக்கின்றனர்.