சர்ச்சை மஞ்ச்ரேக்கர்
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் உலகக்கோப்பை தொடங்கியது முதல் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார். அதற்கு முன்பு இருந்தே அவரது வர்ணனை சரியில்லை என்றும், தவறான கருத்துக்கள் சொல்வதை வழக்கமாகக் கொண்டவர் என்ற பெயர் அவருக்கு உண்டு.
உலகக்கோப்பை சர்ச்சைகள்
உலகக்கோப்பை தொடரில் ஐசிசி வர்ணனையாளராக இருக்கும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், போட்டியில் பங்கேற்கும் இரு நாடுகளுக்கும் பொதுவாக பேசாமல், இந்திய அணிக்கு சாதகமாகவே பேசி வந்தார். இதை இந்திய ரசிகர்களே எதிர்த்ததை அவர் எதிர்பார்த்து இருக்க மாட்டார். மேலும், மும்பை வீரர்களான ரோஹித் சர்மா, ஹர்திக் பண்டியா குறித்து பேசும் போதெல்லாம் ஒரேடியாக புகழ்ந்து பேசுவதும், தோனி மற்றும் பிற வீரர்களை மட்டம் தட்டியும் பேசி வந்தார்.
ஜடேஜா பற்றி பேச்சு
இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ரவீந்திர ஜடேஜா குறித்து மோசமாக பேசி இருந்தார். குல்தீப் யாதவ் - சாஹல் சுழற் பந்துவீச்சு இங்கிலாந்து போட்டியில் எடுபடாத நிலையில், ஜடேஜாவை அணியில் சேர்த்து இருக்கலாமா என்று மஞ்ச்ரேக்கரிடம் கேட்கப்பட்டது.
பகுதி வீரர்
அதற்கு பதில் அளிக்கையில், ஜடேஜா முழுமையான வீரர் இல்லை. பகுதி நேரமாக, எப்போதாவது மட்டும் செயல்படும் வீரர் என்று குறிப்பிட்டு பேசி இருந்தார். இதை ஆங்கிலத்தில் "bits and pieces player" என்று குறிப்பிட்டு இருந்தார். இது முதலில் சர்ச்சை ஆனது.
|
ஜடேஜா பதிலடி
இந்த சர்ச்சை பேச்சுக்கு பதிலடி கொடுத்து இதை மேலும் வளர்த்து விட்டுள்ளார் ஜடேஜா. அவர் கொடுத்துள்ள பதிலடியில், "நீங்கள் விளையாடியதை விட இரண்டு மடங்கு போட்டிகளில் நான் விளையாடி விட்டேன் இன்னும் விளையாடிக் கொண்டு இருக்கிறேன். சாதித்த மக்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வார்த்தை "டயரியா"வை போதுமென்ற வரை கேட்டுவிட்டேன்" என்று கூறி இருக்கிறார். ஜடேஜா இந்தளவு கீழே இறங்கி மஞ்ச்ரேக்கரை விமர்சிக்க வேண்டுமா? என்று பலரும் கேட்டுள்ளனர்.