டெஸ்ட் தொடர்
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவி வரும் சூழலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகின்றன. சௌதாம்ப்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று இருந்தது.
இரண்டாம் டெஸ்ட்
தொடரின் இரண்டாம் டெஸ்ட் மான்செஸ்டர் நகரில் நடைபெற இருந்தது. அதற்காக வீரர்கள் கடந்த திங்கள்கிழமை வந்து சேர்ந்தனர். அப்போது தான் இடையே ஜோப்ரா ஆர்ச்சர் தன் வீட்டுக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. விதிமுறைப் படி இரு அணி வீரர்களும் வெளி உலகத்துடன் தொடர்பின்றி இருக்க வேண்டும்.
தனியாக சென்ற வீரர்கள்
ஆனால், எப்படி ஜோப்ரா ஆர்ச்சர் மட்டும் தன் வீட்டுக்கு செல்ல முடியும்? இங்கிலாந்து அணி நிர்வாகம் தங்கள் வீரர்களை தங்கள் கார்களில் சௌதாம்ப்டனில் இருந்து மான்செஸ்டர் செல்லுமாறு கூறி இருந்தது. அப்போது தான் அந்த சம்பவம் நடந்துள்ளது.
ரூட்டை மாற்றிய ஆர்ச்சர்
ஜோப்ரா ஆர்ச்சர் மான்செஸ்டர் வரும் வழியில் பாதையை மாற்றி சுமார் 120 மைல் தள்ளி உள்ள தன் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் தன் காதலியை சந்திக்கவே அங்கே சென்றார் என ஒரு தகவல் வலம் வருகிறது. பின்னர் அங்கே இருந்து மான்செஸ்டர் வந்து சேர்ந்துள்ளார்.
வெளியான உண்மை
திங்கள் முதல் புதன் வரை அவர் வீட்டுக்கு சென்ற விஷயம் இங்கிலாந்து அணி நிர்வாகத்துக்கு தெரியவில்லை. வியாழன் அன்று இரண்டாவது டெஸ்ட் துவங்க இருந்த நிலையில், அதற்கு முன்தினம் இரவு அவர் வீட்டுக்கு சென்றது தெரிய வந்துள்ளது.
நீக்கம்
இதை அடுத்து ஜோப்ரா ஆர்ச்சர் இரண்டாவது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சாம் கர்ரன் அணியில் இடம் பெற்றார். ஆர்ச்சர் ஐந்து நாள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளார்.
வெ.இண்டீஸ் ஒப்புதல்
ஜோப்ரா ஆர்ச்சர் விதி மீறலை வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் கூறி, வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து போட்டியில் பங்கேற்க ஒப்புதல் வாங்கி உள்ளது இங்கிலாந்து அணி நிர்வாகம். அதனால், இந்த பிரச்சனை பெரிதாகாமல் முடிந்தது.
விமர்சனம்
எனினும், முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் இங்கிலாந்து அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இரு அணி வீரர்களையும் அவர் ஆபத்தில் சிக்க வைத்து விட்டார் என குற்றம் சாட்டி வருகின்றனர். ஆர்ச்சர் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் டெஸ்ட் துவக்கம்
ஆர்ச்சர் விவகாரம் முடிந்து இரண்டாவது டெஸ்ட் சிறிய மழைக்கு பின் துவங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் வென்றால் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.