கேஎல் ராகுல் பேட்டி
இந்த நிலையில் கேப்டன் கேஎல் ராகுல் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மீது எங்களின் கவனம் இருக்கிறது. அதனால் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்காக களத்தில் ஆக்ரோஷத்துடன் செயல்படுவோம். புள்ளிப் பட்டியலில் இந்திய அணி எங்கு இருக்கிறது, இறுதிப் போட்டிக்கு முன்னேற என்ன செய்ய வேண்டும் என்பதும் நன்றாக தெரியும்.
ஆக்ரோஷமான கிரிக்கெட்
அதனால் விளையாட உள்ள ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செஷனிலும் கவனமாக இருப்போம். டெஸ்ட் போட்டி நடக்க உள்ள மைதானத்தின் தன்மையை கவனித்து வருகிறோம். ஐந்து நாட்கள் நடக்க உள்ள டெஸ்ட் போட்டியில் ஒவ்வொரு நாளும் சின்ன சின்ன திட்டத்துடன் களமிறங்குவோம். ஒவ்வொரு நாளும் கிரிக்கெட்டில் தேவை மாறுபடும். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக கூறுகிறேன். ரசிகர்கள் அனைவரும் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை பார்க்க போகிறார்கள் என்று தெரிவித்தார்.
அதிரடி அணுகுமுறை சரியா?
தொடர்ந்து இங்கிலாந்து அணியின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு, இங்கிலாந்து அணியின் ஆட்டம் பொறுப்பற்றது என்று கூற மாட்டேன். ஏனென்றால் கிரிக்கெட்டை எப்படி வேண்டுமானாலும் அணுகலாம். ஒவ்வொரு நாளும் கிரிக்கெட் மாறி வருகிறது. இதனை இப்படி தான் விளையாட வேண்டும் என்று எந்த இலக்கணமும் இல்லை. இங்கிலாந்து அணியின் அதிரடி அணுகுமுறை எனக்கு பிடித்திருந்தது. ஆனால் ஒவ்வொரு அணிக்கும் ஒரு அணுகுமுறை உள்ளது. அது சூழலுக்கு ஏற்ப மாறுபடும் என்று தெரிவித்தார்.
ரோகித் சர்மா எப்போது திரும்புவார்?
தொடர்ந்து ரோகித் சர்மா 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா என்ற கேள்விக்கு, இந்திய அணியின் மிக முக்கிய வீரர் ரோகித் சர்மா. விரைவில் காயத்தில் இருந்து மீண்டு வந்து அடுத்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கிறேன் என்ரு தெரிவித்தார்.
சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு?
பின்னர் தொடக்க வீரர் சுப்மன் கில் பற்றி கேள்விக்கு, சுப்மன் கில் மிக திறமையான வீரர். ஒருநாள் போட்டிகளில் அவரின் பேட்டிங் அருமையாக இருந்தது. அதேபோல் டெஸ்ட் போட்டிகளில் கிடைத்த வாய்ப்புகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கான திறமை உள்ளது. இந்திய அணியில் அவருக்கான வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்படும். ஒரு கேப்டனாக வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்குவது கடமை என்று தெரிவித்தார்.