மும்பை: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா வரும் இலங்கை கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் பங்கேற்கிறது.

முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 16ல் கொல்கத்தாவில் துவங்குகிறது. டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் அணியை சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இந்நிலையில் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பதால், அவருக்கு காயம் ஏற்படுவதை தவிர்க்க இந்த ஓய்வு தரப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்த காலகட்டத்தில், திறமையை மேலும் வளர்த்துக்கொண்ட பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஹர்திக் பாண்டியா பயிற்சி மேற்கொள்ள உள்ளார் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி விவரம்: கோஹ்லி (கேப்டன்), கே.எல்.ராகுல், முரளி விஜய், ஷிகர் தவான், புஜாரா, ரஹானே (துணை கேப்டன்), ரோகித் ஷர்மா, விருதிமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர்குமார், இஷாந்த் ஷர்மா.