ஃபினிஷிங் திறன்
தோனி கடந்த வருடம் ஒருநாள் போட்டிகளில் ரன் அடிக்க திணறி வந்தார். "தோனி அவ்வளவு தான், தன் கடைசி கிரிக்கெட் நாட்களில் இருக்கிறார்" என பலரும் கூறி வந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்கமால் நின்று, அரைசதம் அடித்து, அணியை வெற்றி பெறச் செய்து மீண்டும் தன் ஃபினிஷிங் திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
கோலி சதம்
இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 299 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில் ரோஹித் 43, தவான் 32, கோலி 104 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு அடித்தளம் இட்டனர். கோலியின் இந்த சதம் அவரது 39வது ஒருநாள் போட்டி சதம் ஆகும்.
ஜோடி சேர்ந்த தோனி
கோலி பேட்டிங் செய்து வந்த போது அவருடன் ஜோடி சேர்ந்தார் தோனி. இவர்கள் இருவரும் கூட்டணியாக 82 ரன்கள் அடித்தனர். அடுத்து தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்த தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று ஒற்றை ரன்களாக ஓடி ரன் சேர்த்து வந்தார்.
கடைசி ஓவரில் தோனி
கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி அந்த ஓவரை சந்தித்தார். முதல் பந்தில் சிக்ஸ் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தவர், அடுத்த பந்தில் மின்னல் வேகத்தில் ஒரு ரன் ஓடி அணியை வெற்றி பெற வைத்தார். இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒற்றை ரன்கள்
இந்த அரைசதத்தில் தோனி இரண்டு சிக்ஸர்கள் மட்டுமே அடித்து இருந்தார். ஒரு ஃபோர் கூட அடிக்கவில்லை. மற்ற ரன்கள் அனைத்துமே ஒற்றை ரன்களாக ஓடி எடுத்த ரன்களே. கோலி ஆடிய போது அவருக்கு ஸ்ட்ரைக் கொடுத்து ஆடி வந்த தோனி, அடுத்து தினேஷ் கார்த்திக் வந்த பின்னும், ஒற்றை ரன்கள் மூலமே ரன் எடுத்தார். தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 25 ரன்கள் எடுத்ததும் இந்த வெற்றியில் முக்கிய அம்சமாகும்.
விமர்சனம் செய்ய முடியாது
தோனி முதல் போட்டியிலும் அரைசதம் அடித்தார். எனினும், அந்த போட்டியில் 96 பந்துகளில் 51 ரன்கள் அடித்ததை சிலர் விமர்சித்து வந்தனர். ஆனால், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 54 பந்துகளில் 55 ரன்கள் அடித்து விமர்சகர்கள் வாயை அடைத்துள்ளார் தோனி.
மின்னல் வேக ஸ்டம்பிங்
இதே போட்டியில் தோனி தன் வழக்கமான மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் ஹேண்ட்ஸ்கோம்ப்-ஐ வெளியேறச் செய்தார். ரசிகர்கள் தோனியின் அரைசதத்தையும், மின்னல் வேக ஸ்டம்பிங்-கையும் இணையத்தில் புகழ்ந்து வருகின்றனர்.