2-வது ஒருநாள் போட்டி: இலங்கையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா!
பல்லக்கெலே: இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா இலங்கையை, பல்லக்கெலே மைதானத்தில் எதிர்கொண்டது. இந்திய அணி கடந்த போட்டியில் ஆடிய அதே வீரர்களுடன், மாற்றமின்றி களமிறங்கியது. இலங்கை அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்தது. 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா 54, தவான் 49 ரன்கள் குவித்தனர். இதையடுத்து களமிறங்கிய ராகுல், ஜாதவ், கோஹ்லி சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழக்க இந்திய அணி தடுமாறியது.
டோணி நிலைத்து நின்று ஆடிக் கொண்டிருந்த நிலையில் பாண்ட்யா, அக்சர் படேல் அடுத்தடுத்து அவுட் ஆகினர். டோணியுடன் புவனேஸ்வர் குமார் இணைய ஆட்டம் திசை மாறியது.
அப்போது மழை குறுக்கிட்டதால் இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 231 என நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் 236 ரன்களை எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 2 ஆட்டங்களில் வென்று முன்னிலை வகிக்கிறது.


Click it and Unblock the Notifications