2018இல் நடந்தது என்ன?
மிட்செல் ஸ்டார்க் கடந்த 2018ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 9.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். எனினும், தென்னாபிரிக்க தொடரில் ஏற்பட்ட காயத்தால் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. இது கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
ஐபிஎல் ஆடுவதில் புது சிக்கல்
தற்போது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் இறுதியில் துவங்கி மே மாதம் 16 வரை நடைபெற்றால், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் தொடர் முழுவதும் ஆடுவார்களா என்பது சந்தேகம். காரணம் உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் 6 முதல் துவங்குகிறது. அதற்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்கள் வீரர்களை ஏப்ரல் மாதம் இறுதியில் தங்கள் நாட்டுக்கு அழைத்துக் கொள்ளும்.
இந்த காரணமாக இருக்கலாமோ?
இதனால், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டார்க்கை கொல்கத்தா முன்கூட்டியே ஒப்பந்தத்தில் இருந்து விடுவித்துள்ளது என எடுத்துக் கொண்டாலும் மேலும் சில காரணங்கள் இருக்கலாம். அவருக்கு சென்ற ஐபிஎல்-இல் ஏலம் எடுத்த விலை அதிகம் என கருதி இருக்கலாம். இதே விலைக்கு இந்த ஆண்டு அவர் பாதி தொடர் மட்டும் ஆடினால் அது பலன் தராது என நிர்வாகம் எண்ணி இருக்கலாம்.
குறுந்தகவல் வந்தது
ஸ்டார்க் கொல்கத்தா அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட செய்தி ஸ்டார்க் மூலமே தெரிய வந்துள்ளது. ஸ்டார்க் ஆஸ்திரேலிய கிரிக்கெட் இணையத்தளத்தில் இது பற்றி பேசினார். "எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கொல்கத்தா அணி உரிமையாளர்களிடம் இருந்து என் ஒப்பந்தத்தில் இருந்து நான் விடுவிக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது" என கூறினார்.
தயார்படுத்திக் கொள்ள உதவும்
ஆஸ்திரேலிய அணி ஜூன் மாதம் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இங்கிலாந்து செல்லும். அதையடுத்து அங்கேயே தங்கி ஆஷஸ் தொடரில் பங்கேற்க உள்ளது. மொத்தமாக ஆறு மாத காலம் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் தான் இருக்கும். எனவே, அந்த தொடர்களுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள இந்த விடுவிப்பு உதவியாக இருக்கும் என கூறியுள்ளார்.