முதலாவது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் நிறைவுற்றுள்ள நிலையில், நாளை மறுதினம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது. வெல்லிங்டனில் வரும் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடரில் வெற்றி பெறுவதற்காக இந்திய அணியினர் தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
வீரர்களிடம் எதிரொலிப்பு
இந்நிலையில் தொடர்ச்சியான மற்றும் இடைவெளியில்லாத ஆட்டங்கள் வீரர்களிடம் எதிரொலிப்பதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆயினும் தாங்கள் இந்திய அணிக்காக மிகவும் தீவிரமாக விளையாடி வருவதாகவும் அவர் கூறினார். இந்த இடைவெளி இல்லாத ஆட்டங்கள் வீரர்களிடம் உடலளவில் மற்றும் மனதளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
கேப்டன் விராட் கோலி திட்டவட்டம்
இந்நிலையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தான் மிகவும் தீவிரமாகவும் இதே உறுதியுடனும் இந்திய அணிக்காக விளையாடுவேன் என்றும் அதை எவற்றாலும் தடுக்க முடியாது என்றும் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆண்டுதோறும் 300 நாட்களுக்கும் மேல் கிரிக்கெட்டிற்காக விளையாட்டு, பயிற்சி மற்றும் பயணங்களில் தான் செலவழித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
விராட் கோலி உறுதி
தன்னுடைய 34 அல்லது 35வது வயதில், தான் சொல்வதை தன்னுடைய உடல் கேட்காத போது, தான் மாற்றத்திற்கு தயாராவேன் என்றும் ஆனால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தன்னுடைய விளையாட்டின் தீவிரம் சற்றும் குறையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதுவரை கிரிக்கெட்டின் 3 வடிவங்களிலும் தான் தொடர்ச்சியாக விளையாடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிகமான பங்களிப்பு தேவை
கேப்டனாக செயல்படுவது எளிதான செயல் அல்ல என்று தெரிவித்துள்ள கோலி, அடுத்த 3 ஆண்டுகளுக்கு அணியில் தன்னுடைய பங்களிப்பு அதிகமாக தேவை என்பதை தான் உணர்ந்துள்ளதாகவும், ஆனால் கடந்த 5 -6 ஆண்டுகளுக்கு முன்பு அணியின் தலைமையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றத்தை போல அடுத்த 3 ஆண்டுகளில் மாற்றம் நிகழலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.