சென்னை: இந்தியா- நியூசிலாந்து நடுவேயான 3வது டெஸ்ட்டில் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 299 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஸ்வின் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்தியா முதல் இன்னிங்சில் கோஹ்லியின் இரட்டை சதம், ரஹானேவின் அபார சதம் உதவியோடு 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 557 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்திருந்த நிலையில், நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 299 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியுள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் மார்டின் கப்தில் 72 ரன்களும், டாம் லதாம் 53 ரன்களும் குவித்து வலுவான தொடக்கம் கொடுத்தபோதிலும், அஸ்வினின் சுழலில் சிக்கி அதன்பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தது நியூசிலாந்து.
27.2 ஓவர்களில் 81 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மார்டின் கப்தில் மற்றும் ஜீதன் பட்டேல் இருவரையும், அஸ்வின் ரன்-அவுட் ஆக்கினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 20வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதையடுத்து 258 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி, 18 ரன்கள் எடுத்திருந்தது.
முரளி விஜய் 11 ரன்களுடனும், புஜாரா 1 ரன்னுடனும் களத்தில் நின்றனர். கவுதம் கம்பீர் 6 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தோள்பட்டை வலி காரணமாக ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார். ஃபீல்டிங் செய்தபோது தோளில் ஏற்பட்ட அடியால் ஏற்பட்ட வலி அதிகரித்ததை தொடர்ந்து கம்பீர் இந்த முடிவுக்கு வந்தார்.
ஆட்ட நேர முடிவில் இந்தியா 276 ரன்கள் முன்னிலையுடன் வலுவாக உள்ளது.