இங்கிலாந்து தொடர்
இந்திய அணி வரும் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ளது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி, இங்கிலாந்தை கடைசியாக 2007ம் ஆண்டு தான் அதன் மண்ணிலேயே வைத்து தோற்கடித்துள்ளது. அதன் பிறகு 2011, 2014, 2018ம் ஆண்டுகளில் சென்ற 3 சுற்றுப்பயணங்களிலும் இங்கிலாந்திடம் தோல்வியையே சந்தித்துள்ளது.
இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு
ஆனால் இந்த முறை இந்திய அணிதான் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம், இங்கிலாந்தின் டாப் ஆர்டர் வரிசை தற்போது பெரும் அளவில் சொதப்புகிறது. இதுமட்டுமல்லாமல் நட்சத்திர வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் இருக்க மாட்டார் என தெரிகிறது. இதனால் இந்தியாவின் கையே இதில் ஓங்கியிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பலவீனம்
இந்நிலையில் இந்திய அணி பலமாக இருந்தாலும், அதனிடம் மிகப்பெரும் பலவீனம் உள்ளதாக முன்னாள் வீரர் அலெக்ஸ்டர் குக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்தியா பலமான அணி தான், ஆனால் பிட்ச்-ல் நல்ல ஸ்விங் இருந்தால் இங்கிலாந்துக்கு மிகப்பெரிய வாய்ப்பாகும். போட்டி நடைபெறும் ஆகஸ்ட் மாதத்தில் பிட்ச் ஈரப்பதமாக இருந்தால், இங்கிலாந்தின் பவுலிங் மிக அசுரத்தனமாக இருக்கும். ஸ்விங் பவுலிங்கை எதிர்கொள்ள இந்திய அணி திணறும் என்பதால் இங்கிலாந்து வெற்றி பெற்று விடும் எனக்கூறியுள்ளார்.
பிசிசிஐ திட்டம்
அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான முதல் தொடராக இந்திய அணிக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அமைந்துள்ளது. எனவே இந்த தொடரில் வெற்றி பெற வேண்டும் என அணியில் பல்வேறு மாற்றங்களை செய்ய பிசிசிஐ சிந்தித்து வருகிறது. அதில் புஜாராவை அணியில் இருந்து நீக்குவதும் ஒன்று எனக்கூறப்படுகிறது.