
கொண்டாட்டம்
இந்திய அணியில் இடம்பெற்று இருக்கும் தமிழக வீரர் நடராஜனை தமிழக அரசியல் தலைவர்கள் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். நேற்று நடராஜன் குறித்து டிவிட் செய்த தமிழக முதல்வர் பழனிசாமி, இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன், என்று குறிப்பிட்டு இருந்தார்.

அமைச்சர்
அதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திறமை இருந்தால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்பதை நடராஜன் நிரூபித்து இருக்கிறார். சின்னப்பம்பட்டியில் இருந்து இவர் வளர்ந்த கதை பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். அவர் தனது பயணத்தில் மேலும் சாதனைகளை செய்ய வேண்டும், என்று குறிப்பிட்டு இருந்தார்.

திமுக
திமுக தலைவர்களும் நடராஜனை பாராட்டி இருந்தனர். எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் இது தொடர்பாக செய்துள்ள டிவிட்டில், இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேசப் போட்டிகளுக்கான விக்கெட் கணக்கைத் தொடங்கியிருக்கும் தமிழக வீரர்
நடராஜன் அவர்களுக்கு வாழ்த்துகள்! வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும்!, என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஏன்
இதற்கு முன் இப்படி கிரிக்கெட் வீரர்களை தமிழக அரசியல் தலைவர்கள் கொண்டாடாத நிலையில் தற்போது இவரை கொண்டாடுவது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. இவருக்கு இருக்கும் பெருவாரியான மக்கள் ஆதரவுதான் இதற்கு காரணம் ஆகும். சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து நடராஜன் வந்துள்ளார். அஸ்வின், தினேஷ் கார்த்திக் போல இவர் சென்னை வீரர் கிடையாது.

மக்கள்
இதனால் நடராஜனை மக்கள் பலரும் தங்களில் ஒருவனாக பார்க்கிறார். தங்கள் மண்ணின் மைந்தனாக, தானே வெற்றிபெற்றது போல இவரின் வெற்றியை மக்கள் கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் தோனிக்கு பின்பாக மிகப்பெரிய மாஸ் ஆதரவு கொண்ட வீரராக நடராஜன் இப்போதே உருவெடுத்துள்ளார். முக்கியமாக எளிய மக்களின் ஆதரவு இவருக்கு அதிகம் இருக்கிறது.

பிராண்ட்
நடராஜன் இப்போதே பெரிய பிராண்ட் போல உருவெடுத்து உள்ளார். இதனால் இவரின் பிராண்டை பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசியல் தலைவர்கள் நினைக்கிறார்கள்.இவரை பாராட்டினால் நாமும் டிரெண்டில் இருக்கிறோம் என்று மக்கள் நினைப்பார்கள். இது தேர்தல் நேரத்தில் உதவும் என்று அரசியல் தலைவர்கள் நினைக்கிறார்கள்.

அரசியல் தலைவர்கள்
நடராஜனுடன் நட்பாக இருப்பது போல தமிழக அரசியல் தலைவர்கள் காட்டிக்கொள்கிறார்கள். தேர்தல் நேரத்தில் இவரை பற்றி பேசி ஆதரவு பெற்றுக்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் நினைக்கிறது. திமுக, அதிமுக மட்டுமின்றி பாஜக தலைவர்களும் கூட இப்படி நடராஜன் குறித்து புகழ்ந்து பேச இதுவே காரணம். நடராஜனுக்கு நெருக்கம் நாங்கள்தான் என்பது போல காட்டிக்கொள்ள இவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.


Click it and Unblock the Notifications