ஓவர் பில்டப்பா இருக்கே! இந்த பாக். பேட்ஸ்மேன் கோலிக்கு இணையானவரா? பாக். பயிற்சியாளர் விளக்கம்
ஜோஹன்னஸ்பெர்க் : பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக மாறி வரும் பாபர் அசாம் குறித்து பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் புகழ்ந்து பேசியுள்ளார்.
அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் உலகின் டாப் 5 பேட்ஸ்மேன்களுள் ஒருவராக பாபர் அசாம் உருவெடுப்பார் என கூறிய ஆர்தர், முன்பு பாபர், கோலி போல வருவார் என கூறியதைப் பற்றியும் பேசியுள்ளார்.

பாபர் அசாம் பார்ம்
பாபர் அசாம் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் தொடர்ந்து சிறப்பான பேட்டிங் திறனை வெளிப்படுத்தி வருகிறார். டி20 தொடரில் 2 போட்டிகளில் 128 ரன்கள், ஒருநாள் தொடரில் 5 போட்டிகளில் 195 ரன்கள், டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் 221 ரன்கள் என சிறப்பாக ரன் குவித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் இரு ஆண்டுகளுக்கு முன் பாபர் அசாம் விராட் கோலி போல உருவெடுப்பார் என கூறி இருந்தார். ஆனால், அவர் கூறியதை போல பாபர் அசாம் கடந்த இரண்டு ஆண்டுகளில் செயல்படவில்லை.

ஐந்தாம் இடம் பிடித்த பாபர்
சில போட்டிகளில் சிறப்பாக ஆடும் பாபர், கோலி போல தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபடவில்லை. தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் தான் பாபர் தன் பேட்டிங் திறனை முழுமையாக வெளிப்படுத்தினார் என கூறலாம். இந்த நிலையில், தற்போது ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஐந்தாம் இடம் பிடித்துள்ளார் பாபர்.

அவசரப்பட்டு கூறினேன்
இது பற்றி மிக்கி ஆர்தர் கூறுகையில், தான் இரு ஆண்டுகள் முன்பு பாபர் பற்றி அவசரப்பட்டு கோலி போல வருவார் என கூறினேன். ஆனால், அவர் அது போன்ற ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்த நேரம் எடுத்துக் கொண்டார் என்றார்.

முதல் ஐந்து இடம்
மேலும், பாபர் அனைத்து வித கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்துவிடுவார். அவர் சிறப்பான பேட்ஸ்மேனாக வருவார் என நம்பினேன். அதற்கேற்ப அவர் தொடர்ந்து முன்னேறி வருகிறார் என்றார்.

கோலி அளவுக்கு இல்லை
மிக்கி ஆர்தர் இரு ஆண்டுகளுக்கு முன் கோலி போல வருவார் என பாபர் அசாம்-க்கு பில்டப் கொடுத்த போதே ரசிகர்கள் அதை மறுத்தனர். தற்போது பாபர் சிறந்த பேட்ஸ்மேன் என்றாலும், கோலி அளவுக்கு வரவில்லை. அதை கோலி போல வருவார் எனக் கூறிய மிக்கி ஆர்தரே கூறி உள்ளார்.


Click it and Unblock the Notifications