டெல்லி : கிரிக்கெட் பந்தை சேதப்படுத்திa வீரருக்கு உடந்தையாக இருந்த புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் இருவரும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஐபிஎல் சீசன் 11 முழுவதிலும் பங்கேற்க மாட்டார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
தென்ஆப்ரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி கடைசியாக நடந்த டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. புது முக வீரர் பென்கிராப்ட் கிரிக்கெட் பந்தை அவ்வபோது சேதப்படுத்திய காட்சிகள் வீடியோவில் தெளிவாக பதிவாகி இருந்தது.
இந்த குற்றச்சாட்டை பென்கிராப்ட்டும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் ஒப்புகொண்டனர். பந்து சேதப்படுத்துவது குறித்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் இருவரும் தெரிந்து கொண்டே பென்கிராப்டை தடுத்து நிறுத்தவோ, அவர் குறித்து புகார் அளிக்கவோ இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் உடனயாக நாடு திரும்ப 3 பேருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் ஓராண்டு விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஸ்மித்தும், டேவிட் வார்னரும் ஐபிஎல் போட்டிகளில் இடம்பெற்றுள்ளனர். வார்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும், ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஸ்மித், வார்னருக்கு ஓராண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளதால் விதிமுறைகளின்படி அவர்கள் ஐபிஎல் 2018லும் பங்கேற்க முடியாது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளின் ஆணையர் ராஜீவ் சுக்லாவும் ஸ்மித், வார்னருக்குப் பதிலாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மாற்று வீரர்களை பெறும் என்று கூறியுள்ளார்.