கொரோனா வைரஸ்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. சுமார் 1,50,000 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 93 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
பிசிசிஐ குழப்பம்
இந்த நிலையில், பிசிசிஐ கடந்த சில நாட்களாக ஐபிஎல் தொடரை எப்படி நடத்துவது என்ற குழப்பத்தில் இருந்தது. லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடும் அந்தப் தொடர் மூலம் கொரோனா வைரஸ் பரவினால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் ஐபிஎல் தொடரை ரத்து செய்ய வேண்டும் என பலரும் கூறி வந்தனர்.
ஐபிஎல் தள்ளிவைப்பு
இதையடுத்து, பிசிசிஐ உயர்மட்ட கூட்டத்தில் ஐபிஎல் தொடரை தள்ளி வைப்பதாக கங்குலி முடிவு செய்து அறிவித்தார். மார்ச் 29 அன்று துவங்க வேண்டிய ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு எப்போது துவங்கும் என்பது தெரியவில்லை.
ஒருநாள் தொடர் ரத்து
அடுத்து, இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரை பாதியிலேயே நிறுத்தியது பிசிசிஐ. முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், அடுத்த இரு போட்டிகளையும் ரத்து செய்து, தென்னாப்பிரிக்க வீரர்களை அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைத்தது.
உள்ளூர் போட்டிகள் நிறுத்தம்
இப்படி முக்கிய தொடர்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்த பிசிசிஐ, அடுத்து அனைத்து உள்ளூர் தொடர்களையும் ஒரேடியாக நிறுத்த முடிவு செய்துள்ளது. அந்தப் போட்டிகளை மூடப்பட்ட மைதானங்களில் நடத்த முடியும் என்றாலும் பிசிசிஐ அவற்றை நிறுத்தி உள்ளது.
என்னென்ன தொடர்கள்?
ரஞ்சி ட்ராபியில் வென்ற சௌராஷ்டிரா அணியுடன், ரெஸ்ட் ஆஃப் இந்திய அணி ஆடவிருந்த இரானி கோப்பை போட்டி, விஸ்ஸி ட்ராபி, மகளிர் ஒருநாள் நாக் அவுட் தொடர், மகளிர் ஒருநாள் சேலஞ்சர் தொடர் போன்ற சில முக்கிய உள்ளூர் தொடர்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ரசிகர்கள் பாராட்டு
பிசிசிஐயின் இந்த முடிவுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர். கொரோனா வைரஸ் பரவும் நேரத்தில் கிரிக்கெட் முக்கியமல்ல என்பதை பிசிசிஐ சற்று தாமதமாக புரிந்து கொண்டாலும், விரைவான நடவடிக்கை எடுத்திருப்பதை பாராட்டி உள்ளனர்.