கொல்கத்தா: ஐபிஎல் சீசன் 11ல் இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், இதுவரை கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோத உள்ளது. பஞ்சாப் - டெல்லி போட்டியைப் போலவே, இந்தப் போட்டியும், தினேஷ் கார்த்திக் மற்றும் விராட் கோஹ்லியின் கேப்டன்சி திறமையை சோதிக்கும் போட்டியாகவே அமைகிறது.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் நேற்று துவங்கியது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரும்பியுள்ள சிஎஸ்கே அணி, கடைசி ஓவர்களில் பிராவோ காட்டிய அதிரடியில் வென்றது. முதல் போட்டியே, இந்த சீசனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன.
முதல் ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், கவுதம் கம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகின்றன. அஸ்வின் முதல் முறையாக கேப்டனாக ஐபிஎல் களத்தில் இறங்கியுள்ளார்.
அதுபோலவே, இதுவரை கம்பீர் கேப்டனாக இருந்த கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாகி இருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக். இந்த சீசன் அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் கேப்டன்சி திறமையை சோதிக்கும் களமாகி உள்ளது.
கோல்கத்தாவை எதிர்த்து விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக, இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி உள்ளார். இதுவரை நடந்துள்ள 10 சீசன்களில் பெங்களூரு அணி மூன்று முறை பைனல்ஸ் நுழைந்துள்ளது. ஆனால், ஒருமுறைகூட கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்த முறை கோப்பையை வென்று காதல் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு பிளையிங் கிஸ் உடன் பரிசாக அளிக்க வேண்டும் என்று கோஹ்லி ஆர்வமாக உள்ளார். அதே நேரத்தில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையுடன் கோல்கத்தா அணி களமிறங்குகிறது.
இரு அணிகளும் இதுவரை 20 முறை மோதியுள்ளன. அதில் 11 முறை கோல்கத்தா வென்றுள்ளது. அணியில் 25 வீரர்கள் உள்ளதால், யார் யாரை களமிறக்குவது என்பது கோஹ்லிக்கு தலைவலியாக இருக்கலாம். அதே நேரத்தில், 19 பேர் மட்டுமே அணியில் உள்ளதால், அடுத்த ஒன்றரை மாதங்களில் காயம் இல்லாமல் விளையாட வேண்டிய நிலையில் தினேஷ் கார்த்திக் அணி உள்ளது.