தோனிக்கு எச்சரிக்கையா?
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் தோனிக்கு இடம் மறுக்கப்பட்டது. ஒருநாள் போட்டிகளில் தோனி சரியாக ஆடாததால் அவருக்கு இது எச்சரிக்கையா? என்ற ரீதியில் செய்திகள் வெளியாகின.
தேர்வாளர்கள் விளக்கம் அளித்தனர்
எனினும், தேர்வாளர்கள் இதற்கு விளக்கம் அளித்தனர். "டி20 உலகக்கோப்பை வரும் 2020 இல் நடைபெற உள்ளது. அது வரை தோனி கிரிக்கெட் ஆடுவாரா என்பது உறுதியில்லை. தற்போது தோனிக்கு 37 வயது ஆகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஒருநாள் போட்டிகள் உலகக்கோப்பை வரை தோனி கிரிக்கெட் ஆட திட்டமிட்டுள்ளார். எனவே, தோனியை டி20 அணிகளில் ஆட வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. புதிய வீரர்களை அடையாளம் காண வேண்டிய நிலை வந்துவிட்டது" என கூறினர்.
எந்த சம்பந்தமும் இல்லை
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி முடிந்த பின்னர் கோலியிடம் தோனி நீக்கம் பற்றி கேட்ட போது, "இது பற்றி தேர்வாளர்கள் என்ன நடந்தது என விளக்கம் அளித்து விட்டார்கள் என நினைக்கிறேன். நான் அந்த (தோனியின் நீக்கம் பற்றிய) பேச்சுக்களில் பங்கு பெறவில்லை. இதை தான் தேர்வாளர்கள் கூறினார்கள்" என தனக்கும், தோனி நீக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நியாயப்படுத்தும் வகையில் பேசினார் கோலி.
தோனி வழி விடுகிறார்
மேலும் இது பற்றி பேசிய கோலி, "மக்கள் இந்த விஷயத்தை பற்றி பல விதமாக பேசுகிறார்கள். ஆனால், அப்படி எதுவும் இல்லை. அவர் இந்த அணியின் முக்கியமானவர். அவர் டி20 அணியில் ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் வாய்ப்பு பெறுவார்கள் என நினைக்கிறார். அவர் ஒருநாள் அணியில் தொடர்ந்து விளையாடுவார்" என்றார்.