என்ன பிரச்சனை
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஸ்மித், கேமரூன் ஆகிய இருவரும் உப்புத்தாள் போன்ற சாதனம் கொண்டு பந்தை தேய்த்து இருக்கிறார்கள். இதை பாக்கெட்டில் மறைமுகமாக வைத்து கொண்டு வந்துள்ளனர். பந்தை மாற்றும் போது, உப்புத்தாளை வைத்து தேய்த்து இருக்கிறார்கள். பந்து நன்றாக சுழல வேண்டும் என்று இப்படி செய்துள்ளார்கள்.
வீரர்கள் ஆதரவு
இந்த நிலையில் பல நாட்டு வீரர்கள் ஸ்மித்துக்கு ஆதரவாக பேசியுள்ளனர். கங்குலி, சச்சின், அஸ்வின், ரோஹித் சர்மா, பிராவோ, கம்பீர் ஆகியோர் ஸ்மித்துக்கு ஆதரவாக பேசியுள்ளனர். இது மிகவும் மோசமான தண்டனை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பற்றி கூறியுள்ளனர்.
வருத்தம் தெரிவித்தார்
இந்த நிலையில் தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளசிஸ், ஸ்மித்துக்கு வாட்ஸ் ஆப் மூலம் சில மெசேஜ்கள் அனுப்பி இருக்கிறார். நேற்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் டு பிளசிஸ் இந்த தகவலை வெளியிட்டார். இந்த மோசமான சமயத்தில் சக வீரர்கள்தான் ஸ்மித்துக்கு ஆதரவாக இருக்க வேண்டும் டு பிளசிஸ் தெரிவித்துள்ளார். அதேபோல் மற்ற தென்னாப்பிரிக்க வீரர்களும் ஸ்மித்துக்கு ஆதராவாக களமிறங்கி இருக்கிறார்கள்.
என்ன
டு பிளசிஸ் அனுப்பிய வாட்ஸ் ஆப்பில் கடிதத்தில் ''இது மிகவும் மோசமான தண்டனை. இதை எப்படியாவது கடந்து வர வேண்டும். உங்களை போன்ற மிக சிறந்த வீரர் ஒருவர் தேவையில்லாத சூழ்நிலையில் மாட்டிக்கொண்டுள்ளீர்கள். விரைவில் எல்லாம் சரியாகும் என்று நம்புகிறோம்'' என்று அனுப்பி இருக்கிறார். இதற்கு ஸ்மித் என்ன பதில் அளித்தார் என்று டு பிளசிஸ் கூறவில்லை.
டு பிளசிஸ் செய்த தவறு
ஸ்மித் போலவே டு பிளசிஸ் இதற்கு முன் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் மாட்டி உள்ளார். ஒருமுறைக்கு இரண்டு முறை டு பிளசிஸ் மீது புகார் அளிக்கப்பட்டு அது நிரூப்பிக்கபட்டுள்ளது. ஆனால் அப்போதெல்லாம் டு பிளசிஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக அதற்கு பின்புதான் அவர் தென்னாப்பிரிக்க கேப்டனாகவே நியமிக்கப்பட்டார். ஆனால் ஸ்மித்திற்கு 1 வருடம் தடை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.