முன்னாள் வீரர்கள் விமர்சனம்
ஆனால், இரண்டாவது போட்டியில் 159 ரன்கள் மற்றும் இன்னிங்க்ஸ் தோல்வியை தழுவியது இந்திய அணி. விராட் கோஹ்லி தலைமையில் முதல் முறையாக இன்னிங்க்ஸ் தோல்வி அடைந்தது. இதையடுத்து, முன்னாள் வீரர்கள் சேவாக், பிஷன் சிங் பேடி, விவிஎஸ் லக்ஷ்மன், முஹம்மது கைஃப், வினோத் காம்ப்ளி என ஒரு பட்டாளமே கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது.
போராடாத வீரர்கள்
முதல் டெஸ்ட் தோல்விக்கும், இரண்டாவது டெஸ்ட் தோல்விக்கும் இடையிலான ரன் வித்தியாசம் மற்றும், இன்னிங்க்ஸ் தோல்வி என்பது மட்டுமே இந்த கடும் விமர்சனத்துக்கு காரணமல்ல. இந்திய வீரர்கள் துளி கூட போராடவில்லை என்பதே முக்கிய காரணம்.
முதலில் அச்சுறுத்திய இந்தியா
முதல் டெஸ்ட்டில் இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது. ஆனாலும், பந்துவீச்சில் அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மா விக்கெட்கள் வீழ்த்தி இங்கிலாந்தை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கினர். இங்கிலாந்தின் பேட்டிங்கும் மோசமாகவே இருந்தது. பயமறியா இளம் வீரர் சாம் கர்ரன் இரண்டாவது இன்னிங்க்ஸில் அடித்த ரன்களில் தான் அவர்களின் வெற்றி இருந்தது.
தவறுகளை திருத்திய இங்கிலாந்து
வெற்றிக்குப் பின் இங்கிலாந்து கூட அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், அவர்களும் நிறைய தவறுகள் செய்தார்கள். தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்று தான் பேட்டியின் போது கூறினார்கள்.
அதிரடிக்கு மாறிய இங்கிலாந்து
அதே போல, இரண்டாவது போட்டியில், சில மாற்றங்கள் செய்தனர். பேட்டிங்கில் செய்த தவறுகளை சில வீரர்கள் திருத்திக் கொண்டனர். அதிரடி ரன் குவிப்புக்கு மாறியதும் கவனிக்கத்தக்கது. முதல் இன்னிங்க்ஸில் விக்கெட்கள் வீழ்ந்த போதும், ரன் ரேட் நான்கை ஒட்டியே இருந்தது. அதே போல, பந்துவீச்சில் கடுமையான அச்சுறுத்தல் இருந்தது.
இந்திய அணியின் சரணாகதி
ஆனால், இந்திய அணி முதல் போட்டியில் காட்டிய சிறிய போராட்டத்தை கூட இரண்டாவது போட்டியில் காட்டவில்லை. மாறாக, இந்திய பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்து பந்துவீச்சை கண்டு மிரண்டது தான் மிச்சம். இந்திய பந்துவீச்சு அருமையாக துவங்கினாலும், பின்பு இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோ, வோக்ஸ் இணைந்த பின் மொத்தமாக சரணடைந்தது.
இன்னிங்க்ஸ் தோல்வி என்பதைக் காட்டிலும் இந்த மோசமான செயல்பாடுகள் தான் இந்திய அணி மீது கடும் விமர்சனம் எழ காரணம். இந்திய அணி அடுத்த போட்டியில் வெல்கிறதோ இல்லையோ, போராட வேண்டும் என்பதுதான் கிரிக்கெட் விரும்பிகளின் ஆசை.