
இரண்டாவது டி20 போட்டி
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இந்தூரில் நடைபெறுகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ஆடின.

டாஸ் வென்ற இந்தியா
இந்தப் போட்டியில், இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்கள் குணதிலகா - அவிஷ்கா பெர்னாண்டோ அதிரடியாக ஆடினர்.

முதல் விக்கெட்
4.5 ஓவரில் 38 ரன்கள் குவித்தது இந்த ஜோடி. வாஷிங்க்டன் சுந்தர் பந்துவீச்சில் அவிஷ்கா பெர்னாண்டோ 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். எனினும், இலங்கை அணி தொடர்ந்து பவர் பிளே ஓவர்களில் ரன் குவித்து வந்தது.

ரன் அவுட் வாய்ப்பு
இந்த நிலையில், 7.4 ஓவரில் குணதிலகா விக்கெட்டை வீழ்த்தினார் நவ்தீப் சைனி. அடுத்த பந்தில் புதிதாக பேட்டிங் செய்ய வந்த ஒஷாதா பெர்னாண்டோ ரன் அவுட் வாய்ப்பை இந்திய அணிக்கு கொடுத்தார்.

பெரேரா குழப்பம்
ஒஷாதா பந்தை பேக்வேர்டு திசையில் அடித்து விட்டு ரன் ஓடி வருமாறு குசால் பெரேராவை அழைத்தார். பெரேரா ரன் ஓடலமா? என்ற குழப்பத்தில் நின்று, பின் ஓடத் துவங்கினார்.

பந்தை வீசிய ஸ்ரேயாஸ்
எப்போதும் ஜடேஜா பீல்டிங் செய்யும் பேக்வேர்டு திசையில் ஸ்ரேயாஸ் ஐயர் பீல்டிங் நின்று இருந்தார். தன்னை நோக்கி வந்த பந்தை எடுத்த ஸ்ரேயாஸ் பந்தை பந்துவீச்சாளர் திசையை நோக்கி எறிந்தார்.

என்ன செய்து இருக்க வேண்டும்?
ஒஷாதா பெர்னாண்டோ மிக வேகமாக பந்துவீச்சாளர் திசையை நோக்கி ஓடினார். குசால் பெரேரா விக்கெட் கீப்பர் திசையில், பல அடி தூர இடைவெளியில் கிரீஸை அடைய ஓடிக் கொண்டிருந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட் கீப்பரை நோக்கி பந்தை எறிந்து இருக்க வேண்டும்.

பறிபோன ரன் அவுட்
ஆனால், அவர் பந்துவீச்சாளர் திசையை நோக்கி எறிந்தார். அதுவும் நேரடியாக ஸ்டம்புகளை தகர்த்து இருந்தால் ரன் அவுட் ஆகி இருக்கும். அதுவும் நடக்கவில்லை. எனவே, இந்தியா எளிதான ரன் அவுட் வாய்ப்பை இழந்தது.

ரசிகர்கள் விமர்சனம்
ஜடேஜா பீல்டிங் செய்யும் அதே இடத்தில் நின்ற ஸ்ரேயாஸ் ஐயர், ரன் அவுட் வாய்ப்பை கோட்டை விட்டதால், ரசிகர்கள் அதை சுட்டிக் காட்டினர். அணியில் சிறந்த பீல்டர் மற்றும் ஆல்-ரவுண்டரான ஜடேஜா இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? என்று விமர்சித்தனர்.


Click it and Unblock the Notifications