443 ரன்களுக்கு டிக்ளர்
மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்டில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் பொறுப்பாக ஆட 443 ரன்கள் எட்டிய போது, டிக்ளர் செய்தார் கோலி.
292 ரன்கள் முன்னிலை
அடுத்து ஆஸ்திரேலிய அணியை திக்கு முக்காட வைத்த இந்திய பந்துவீச்சாளர்கள், 151 ரன்களுக்கு அந்த அணியை சுருட்டினர். பும்ரா 6 விக்கெட்கள் வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தினார். இந்தியா 292 ரன்கள் முன்னிலை பெற்றது.
பேட்டிங் ஆட வந்தது
200 ரன்களுக்கு அதிகமாக முன்னிலை பெற்று இருந்தாலே, ஃபாலோ-ஆன் கொடுக்க முடியும். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸில் எடுத்த ரன்களை விட இரு மடங்கு அதிக ரன்கள் முன்னிலை பெற்று இருந்த நிலையில், இந்தியா ஃபாலோ-ஆன் கொடுக்கும் என எதிர்பார்த்த நிலையில், இரண்டாம் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆட வந்தது.
அதிர்ச்சி அளித்த பேட்ஸ்மேன்கள்
சரி, பேட்டிங்கில் விரைவாக ரன் குவித்து ஆஸ்திரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயிப்பார்கள் என பார்த்தால் 44 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து அதிர்ச்சி அளித்தது. மாயன்க் 42, ரிஷப் 33 என இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர்.
106 ரன்கள் மட்டுமே எடுத்தது
அவர்களும் ஆட்டமிழக்க 106 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இழந்து பரிதாபமாக காட்சி அளித்தது இந்திய ஸ்கோர்போர்டு. கோலி 106 ரன்களே போதும் என டிக்ளர் செய்தார். இந்திய அணி 399 ரன்கள் என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயித்தது.
எளிய வெற்றி பறிபோனது
மெல்போர்ன் ஆடுகளம் மூன்றாம் நாள் முதல் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியுள்ளது தெளிவாக தெரிந்தும், கோலி ஏன் ஃபாலோ-ஆன் கொடுக்கவில்லை என்பது புரியவில்லை. ஃபாலோ-ஆன் கொடுத்து இருந்தால் இந்தியா எளிதாக இன்னிங்க்ஸ் வெற்றி பெற்று இருக்கலாம் என்பதே ரசிகர்களின் கருத்து.
அவசரகதியில் முடிவு
இதில் மற்றொரு வேடிக்கை என்னவென்றால், முதல் இன்னிங்க்ஸில் ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் பேட்டிங் செய்து கொண்டு இருந்த போதே அவசர கதியில் டிக்ளர் செய்தார் கோலி. அப்போது இந்தியா 443 ரன்கள் எடுத்து இருந்தது.
எப்போது டிக்ளர் செய்யலாம்?
ரோஹித்தை மேலும் பேட்டிங் ஆட வைத்து கூடுதலாக 50 ரன்கள் சேர்த்து இருந்தால், ஆஸ்திரேலிய அணிக்கு அது மேலும் அழுத்தம் கொடுத்து இருக்கும். பொதுவாக டெஸ்டில் முதல் இன்னிங்க்ஸில் 500 ரன்களுக்கு மேல் அடித்தால் மட்டுமே டிக்ளர் செய்வது வழக்கம்.
தொடரும் தவறான முடிவுகள்
முதல் இன்னிங்க்ஸில் அவசர அவசரமாக எடுத்த வரை போதும் என டிக்ளர் செய்த கோலி, 292 ரன்கள் முன்னிலை போதாது என ஏன் நினைத்தார்? கோலியின் முடிவுகள் பலவும் தவறாக சென்று கொண்டு இருக்கின்றன என்பதற்கு இது ஒரு முக்கிய உதாரணம் ஆகும். ஆஸ்திரேலிய அணி 399 ரன்கள் இலக்கை நோக்கி ஆட ஆரம்பித்து, விரைவாக விக்கெட்களை இழந்து வருகிறது. தற்போது வரை 5 விக்கெட்களை இழந்துள்ளது. இந்தியா நிச்சயம் வெற்றி பெற்று விடும். ஆனால், கோலியால் அது தாமதமாகி உள்ளது.