கோலியின் சதம்
கோலி கடந்த 2016 முதல் 2018 வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக ஒரே ஆண்டில் அதிக சர்வதேச ரன்கள் அடித்த வீரர் என்ற பெயர் பெற்றார். 2019 ஆம் ஆண்டில் தன் முதல் சதத்தை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் அடித்தார் கோலி.
மூன்று ஆண்டுகளில் சதம்
இரண்டாவது ஒருநாள் போட்டி ஜனவரி 15 அன்று நடைபெற்றது. இதே போல 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் ஜனவரி 15 அன்று சதம் அடித்து உள்ளார் கோலி. தொடர்ந்து மூன்று மகர சங்கராந்தி தினங்களில் சதம் அடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் கோலி.
2017ஆம் ஆண்டு சதம்
2017ஆம் ஆண்டில் ஜனவரி 15 அன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா 351 என்ற பெரிய இலக்கை துரத்தி ஆடியது. அந்த போட்டியில் கோலி 122 ரன்கள் அடித்தார். அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
2018ஆம் ஆண்டு சதம்
2018ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 153 ரன்கள் அடித்து அசத்தினார் கோலி. அந்த போட்டியில் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
2019ஆம் ஆண்டு சதம்
2019 ஜனவரி 15 அன்று இரண்டாவது ஆஸ்திரேலிய ஒருநாள் போட்டியில் கோலி 104 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்த மூன்று ஜனவரி 15 சதங்களுக்கு பின் ஜாதக ரீதியாக என்ன காரணம் இருக்கிறது என சிலர் ஆராய்ந்து வருகிறார்கள்.
அடுத்த மூன்று வருடங்கள்
அந்த ஆராய்ச்சியின் முடிவாக அடுத்த 2020 முதல் 2022 வரை கோலி இது போல ஜனவரி 15 அன்று சதம் அடிப்பார் என கூறி வருகிறார்கள். ஆனால், அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியா ஜனவரி 15 அன்று கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்குமா? என்ற கேள்வியும் உள்ளது.
கோலிக்கு வந்த கொடுமை
கோலி வருடத்தின் குறிப்பிட்ட ஒரே நாளில் சதம் அடிப்பது மகிழ்ச்சியான செய்தி என்றாலும், அதை ஜாதக ரீதியாக ஆராய்வது எல்லாம் "இது என்னடா கோலிக்கு வந்த கொடுமை!!" என்பது போல தான் இருக்கிறது.