இந்தியா பரிதாப தோல்வி
இந்திய அணி நான்காவது போட்டியில் 30.5 ஓவர்களில் 92 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. அடுது ஆடிய நியூசிலாந்து அணி 14.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கோலி ஓய்வு
கோலி நியூசிலாந்து ஒருநாள் தொடரின் கடைசி இரு போட்டிகளில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்டார். அதனால் இந்த போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
தோனிக்கு தசைப்பிடிப்பு
தோனி தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால், மூன்றாவது மற்றும் நான்காவது போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. மூன்றாவது போட்டியில் கோலி இருந்த நிலையில், நான்காவது போட்டியில் இரண்டு மூத்த வீரர்களும் அணியில் இல்லை.
பொறுமையான ஆட்டம் முக்கியம்
மூத்த வீரர்கள் இல்லாததே இந்திய அணி 92 ரன்களுக்கு சடசடவென சரிந்ததற்கு காரணம் என்ற பேச்சு எழுந்துள்ளது. தோனி பொறுமையாக ரன் சேர்ப்பது கடந்த காலத்தில் விமர்சனத்துக்கு உள்ளானது. ஆனால், இந்த போட்டிக்கு பின், பலரும் தோனி இந்த போட்டியில் பங்கேற்று இருந்தால் தன் பொறுமையான ஆட்டம் மூலம் அணியை கரை சேர்த்திருப்பார் என கூறி வருகிறார்கள்.
மிடில் ஆர்டர் சொதப்பல்
மிடில் ஆர்டரில் அம்பதி ராயுடு 0, தினேஷ் கார்த்திக் 0, கேதார் ஜாதவ் 1 என மோசமாக ஆடி மூவரும் அதிர்ச்சி அளித்தனர். இந்த நேரத்தில் தோனி இல்லாததை வெகுவாக உணர முடிந்தது.
அனுபவம் முக்கியம்
இந்திய அணியில் அனுபவம் எந்த அளவு முக்கியம் என்பதை புட்டு புட்டு வைக்கும் வகையில் அமைந்தது இந்த நான்காவது போட்டி. கேப்டன் கோலி உட்பட இந்திய வீரர்கள் பலருக்கும் கலங்கரை விளக்கமாக இருந்து வழி காட்டியவர் தோனி. அவருக்கு அடுத்து தன் தொடர்ந்த சிறப்பான பேட்டிங் மூலம் அணியை காப்பற்றி வருபவர் கோலி.
எச்சரிக்கை மணி
இவர்கள் இருவரும் இல்லாத இந்திய அணி சிறிய தடுமாற்றத்தில் இருந்து கூட மீள முடியாத நிலையில் இருப்பது உலகக்கோப்பைக்கு முன் இந்திய அணிக்கு அடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி. சுதாரிக்குமா இந்தியா?