காயத்தோடு ஆடிய அஸ்வின்
நான்காம் டெஸ்ட் போட்டிக்கு முன்பே அஸ்வின் காயத்தில் இருப்பதாகவும், நான்காம் டெஸ்டில் ஆடுவது சந்தேகம் எனவும் செய்திகள் வந்தன. எனினும், கடைசி நேரத்தில் அவர் சரியாகி விட்டார் என அணியில் சேர்க்கப்பட்டார்.
மொயீன் அலி - அஸ்வின் ஒப்பீடு
நான்காம் டெஸ்டில் மொயீன் அலி பயன்படுத்திய ஆடுகளத்தின் சொரசொரப்பான பகுதியை அஸ்வின் பயன்படுத்தவில்லை என புகார் எழுந்தது. உச்சகட்டமாக அதனால் தான் இந்தியா தோல்வி அடைந்தது என பலரும் கூறினர். இது ஓரளவு உண்மைதான் என்றாலும், அஸ்வின் அந்த போட்டியில் முழு உடல் தகுதியோடு தான் ஆடினாரா? என்ற கேள்வி உள்ளது.
காயமா? இல்லையா?
4வது டெஸ்டில் மூன்றாம் நாள் அஸ்வின் காயமடைந்தார் என ஒரு தகவல் உள்ளது. அதன் காரணமாக தற்போது ஐந்தாம் போட்டியில் ஆட மாட்டார் எனவும் தகவல்கள் உள்ளன. அப்படியென்றால், அஸ்வினுக்கு எப்போது காயம் ஏற்பட்டது என சரியான தகவல்கள் இல்லை. அவர் மூன்றாம் போட்டியில் ஏற்பட்ட காயத்தோடு நான்காம் போட்டியிலும் பங்கேற்றுள்ளார். அவர் சரியாக பந்துவீசாமல் போக இதுவும் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் இப்போது எழுகிறது.
அஸ்வின் மீது குற்றச்சாட்டு
இந்தியா தொடரை இழந்துள்ள நிலையில் அதற்கு பதில் சொல்ல வேண்டிய ரவி சாஸ்திரி, பேட்ஸ்மேன்கள் தொடர் முழுவதும் செய்த தவறுகள், அவர்களின் மோசமான செயல்பாடுகள் பற்றி பேசாமல் இதுதான் 15-20 ஆண்டுகளில் சிறந்த அணி என கூறியவர், ஒரு கட்டத்தில் மொயீன் அலி செய்ததை அஸ்வின் செய்யவில்லை என குறை கூறினார். அது நான்காம் போட்டி பற்றிய விஷயம் மட்டுமே என்ற நிலையில் தொடர் தோல்வியை மறைக்க அதை தேவையில்லாமல் இழுத்துள்ளார்.
சஞ்சய் பங்கர் சொன்ன குற்றச்சாட்டு
பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் நான்காம் டெஸ்ட் நடந்து கொண்டு இருந்த போது பேட்டியளித்தார். அப்போது அஸ்வின், பண்டியா ஆட்டமிழந்தது பொறுப்பற்றது என கூறினார். இவர் பேட்டியிலும், முக்கிய முழு நேர பேட்ஸ்மேன்கள் பற்றி பேசாமல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்களான அஸ்வின், பண்டியா பற்றி பேசிவிட்டுப் போனார்.
உல்டாவாக சொன்ன ரஹானேபல்டி
நேற்று ரஹானே பேட்டி அளித்த போது, அஸ்வின் நன்றாகவே பந்து வீசினார், நாங்கள் தான் பேட்டிங்கில் சொதப்பி விட்டோம் என கூறினார். இவரது பேச்சு ரவி சாஸ்திரியின் பேச்சுக்கு அப்படியே நேர் எதிராக இருந்தது. அணியில் எல்லோரும் ஒரே நிலைப்பாட்டில் இல்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது ரஹானேவின் பேச்சு.
பூசணிக்காயை மறைக்க முயற்சி?
இதில் இருந்து ஒன்று மட்டும் தெரிகிறது. அஸ்வின் காயத்தோடு ஆடினாரா? இந்திய பேட்ஸ்மேன்கள் ஏன் சரியாக ஆடவில்லை என்பது பற்றியெல்லாம் பேசாத ரவி சாஸ்திரி மற்றும் அவரது கூட்டாளிகள் அஸ்வின், மொயீன் அலி போல பந்து வீசவில்லை என்பதை வைத்து எதை மறைக்க முயல்கிறார்கள்?