கொரோனா தாக்கம்
2020 துவக்கம் முதல் கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. அதனால், இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம் அடைந்து வருகின்றன.
ஐபிஎல் தள்ளி வைப்பு
2020 ஐபிஎல் தொடரை கொரோனா காரணமாக ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடத்த பிசிசிஐ முதலில் திட்டமிட்டது. ஆனால், நிலைமை மோசமானதை அடுத்து ஐபிஎல் தொடரை ஏப்ரல் 15 வரை தள்ளி வைத்துள்ளது.
பிசிசிஐ நம்பிக்கை
எப்படியும் ஐபிஎல் தொடரை நடத்த தீவிரமாக இருக்கும் பிசிசிஐ தொடரை நடத்த ஐந்து தேதிகளை குறித்து வைத்துள்ளது, அதிகபட்சமாக மே மாதம் 5ஆம் தேதிக்குள் ஐபிஎல் தொடரை தொடங்க பிசிசிஐ எண்ணி வருகிறது. ஆனால், அதற்கு கொரோனா வைரஸ் தாக்கம் குறைய வேண்டும்.
பொது இடங்கள் மூடல்
நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே தான் வருகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள், கேளிக்கை பூங்காக்கள், மால்கள், தியேட்டர் என பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
பெரிய மாற்றம் நடக்க வேண்டும்
இந்த நிலையில், ஐபிஎல் தொடர் துவங்க வாய்ப்பே இல்லை. மே மாதத்திற்குள் கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறைந்து, அதற்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்துவதை பற்றி சிந்தித்துப் பார்க்க முடியும்.
விசா சிக்கல்
மேலும், தொடரை ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் பாதுகாப்பாக நடத்தினாலும், வெளிநாட்டு வீரர்களுக்கு விசா வழங்க இந்திய அரசு ஒப்புக் கொண்டாலும், வெளிநாட்டு கிரிக்கெட் அமைப்புகள் தங்கள் வீரர்களை கொரோனா பரவும் நேரத்தில் இந்தியா செல்ல அனுமதி அளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடக்கவே நடக்காது
அதனால், ஐபிஎல் அணி உரிமையாளர்கள், 2020 ஐபிஎல் தொடர் நடக்கும் என்ற எண்ணத்தை கைவிட்டு விட்டதாக தெரிகிறது. ஐபிஎல் தொடர் நடக்கவே நடக்காது என முடிவு செய்து, நஷ்டக் கணக்கை பற்றி சில அணிகள் சிந்திக்கத் துவங்கி விட்டதாக கூறப்படுகிறது.
நஷ்டம் அளவு
ஒவ்வொரு அணிக்கும் அடிப்படை நஷ்டமாக சம்பளம் மட்டுமே 15 - 20 கோடி அளவுக்கு இருக்கும். அது மட்டுமின்றி தங்கள் அணிகளின் பிரத்யேக பொருட்கள் விற்பனை, ஓராண்டுக்கான நிர்வாக செலவுகள் என மேலும் சில கோடிகள் நஷ்டம் அடையக் கூடும்.
மாலை கூட்டம்
இந்த நிலையில், திங்கள் அன்று மாலை 6 மணிக்கு ஐபிஎல் தொடர் ரத்து ஆக உள்ளதை பற்றி ஐபிஎல் உரிமையாளர்கள் தொலைபேசி மூலம் கூட்டம் போட்டு பேச உள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. ஐபிஎல் நடக்காமல் போனால் ஏற்படும் நஷ்டம் குறித்து அதில் பேசப்படும் என தெரிகிறது.
நஷ்டத்தை ஏற்க தயார்
கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் ஐபிஎல் தொடர் நடக்கும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டதாகவே தெரிகிறது. நஷ்டத்தை ஏற்க இப்போதிருந்தே தயார் ஆகி வருவதாக ஒரு அணியின் அதிகாரி கூறி உள்ளார்.