கொரோனா வைரஸ் தாக்கம்
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுவரை இரண்டு லட்சம் பேர் வரை கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்படுள்ளனர். பத்தாயிரம் பேர் வரை கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்தியா பாதிப்பு
இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 195 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை உயருமா? என்ற அச்சம் அனைவரிடமும் உள்ளது. அரசு கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தடைபட்ட கிரிக்கெட் போட்டிகள்
கொரோனா அச்சத்தால் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டாம் என அரசு அறிவுறுத்தி உள்ளது. பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியா - தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் தொடரை பாதியில் ரத்து செய்தது பிசிசிஐ.
ஐபிஎல் தொடர் தள்ளி வைப்பு
அதே போல, 2020 ஐபிஎல் தொடரை தள்ளி வைத்தது. மார்ச் 29 அன்று துவங்க வேண்டிய ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து எப்போது அந்த தொடர் துவங்கும் என்பது முடிவு செய்யப்படவில்லை.
ரசிகர்கள் இல்லாத மைதானம்
ஏப்ரல் 15க்குப் பின் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் ஐபிஎல் தொடரை நடத்த ஒரு திட்டம் உள்ளது. மறுபுறம் ஜூலை முதல் செப்டம்பர் வரை உள்ள காலகட்டத்தில் ஐபிஎல் தொடரை நடத்தவும் ஒரு திட்டம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மத்திய அரசு சொன்ன அறிவுரை
பிசிசிஐ தொடரை நடத்த தீவிரமாக இருக்கும் நிலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கொரோனா பரவும் நேரத்தில் இந்த தொடரை நடத்த வேண்டாம் என பிசிசிஐக்கு அறிவுறுத்தி உள்ளது. இதை அந்த அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் தம்மு ரவி உறுதி செய்தார்.
பிசிசிஐ முடிவு
அரசு என்ன அறிவுரை கூறினாலும் ஐபிஎல் தொடரை எப்படியேனும் நடத்தி விட வேண்டும் என உறுதியாக உள்ளது பிசிசிஐ. கொரோனா பாதிப்பு குறையும் பட்சத்தில் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு உள்ளது.
ரத்தாக வாய்ப்பு
அதே சமயம், கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. மருந்து கண்டுபிடிக்கும் வரை குறையாது என சிலர் கூறுகின்றனர். அதனால், மருந்து கண்டுபிடிக்க தாமதம் ஆகும் பட்சத்தில் ஐபிஎல் தொடர் ரத்தாக அதிக வாய்ப்பு உள்ளது.
பெரும் நஷ்டம்
பிசிசிஐ கிடைக்கும் இடத்தில் ஐபிஎல்-ஐ நடத்த பிடிவாதமாக இருக்க முக்கிய காரணம், தொடர் ரத்தானால் ஏற்படும் மிகப் பெரும் நஷ்டம் தான். சுமார் 3000 கோடி அளவுக்கு பிசிசிஐக்கு மட்டுமே வருவாய் இழப்பு ஏற்படும். அது மட்டுமில்லாமல், ஐபிஎல் அணிகளுக்கும் பெரும் இழப்பு ஏற்படும். மறுபுறம் ரசிகர்கள், பிசிசிஐ நஷ்டத்தை பற்றி யோசிக்காமல் ஐபிஎல் தொடரை ரத்து செய்ய வேண்டும் என்கிறார்கள்.