தோனி நிலை
தோனி கடந்த 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. அவராகவே அணியை விட்டு விலகி இருப்பதாக ஒரு தகவல் கூறப்பட்டது. இதனிடையே, பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து தோனியின் பெயர் நீக்கப்பட்டது.
என்ன சிக்கல்?
தோனி மீண்டும் அணிக்கு வருவதில் இரண்டு சிக்கல்கள் இருந்தன. ஒன்று அவற்றின் உடற்தகுதி. மற்றொன்று, அவரின் பேட்டிங் பார்ம். அணிக்கு திரும்ப வேண்டும் என்றால் இவை இரண்டையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் தோனி.
இந்திய அணிக்கு வர வாய்ப்பு
2020 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க தோனி விரும்புவதாக ஒரு தகவல் இருந்தது. இந்த நிலையில், அதற்கு தோனி ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால், இந்திய அணியில் இடம் பெறலாம் என இந்திய அணி நிர்வாகம் சார்பாக கூறப்பட்டது.
பயிற்சி ஆரம்பம்
கடந்த ஜனவரி மாதம் முதல் ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் தோனி பயிற்சியை துவக்கினார். நீண்ட காலம் கழித்து அவர் பயிற்சி செய்ய வந்தார். அப்போதே தோனி மீண்டும் இந்திய அணிக்கு வர விரும்புகிறார் என்பது தெரிந்தது.
மருத்துவ ஆலோசனை
இடையே சிறப்பு விளையாட்டு மருத்துவ நிபுணர் ஒருவரை சந்தித்து ஆலோசனை பெற்றார் தோனி. அவர் என்ன ஆலோசனை நடத்தினார் என்பது தெரியாவிட்டாலும், அதன் பின் அவர் ஐபிஎல் பயிற்சியை உடனடியாக துவக்கினார்.
ஐபிஎல் தயார் நிலை
கடந்த மார்ச் 2 முதல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் தன்னை தயார் செய்து வந்தார். பயிற்சியில் அவர் பல சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தார்.
கொரோனா தாக்கம்
இந்த நிலையில் தான் உலகில் கொரோனா அச்சுறுத்தல் எழுந்தது. 130க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் தினமும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் உலகம் முழுவதும் தடைபட்டுள்ளது.
ஐபிஎல் தள்ளி வைப்பு
இந்த நிலையில், மார்ச் 29 அன்று துவங்க இருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15 வரை தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஐபிஎல் தொடர் தொடங்குமா அல்லது கைவிடப்படுமா? என்பது தெரியவில்லை. இந்த நிலையால், தோனியின் ஆசை நிறைவேறாமல் போகும் நிலையில் உள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடர்
2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதால், கொரோனா பாதிப்பால் அந்த தொடருக்கு இதுவரை எந்த அச்சுறுத்தலும் இல்லை. அதில் ஆடவே தோனி ஆசைப்படுகிறார்.
தோனி ஆசை நிறைவேறுமா?
ஆனால், ஐபிஎல் தொடர் நடக்காமல் போன பின், கொரோனா தாக்கம் குறைந்து, டி20 உலகக்கோப்பை நடக்கும் பட்சத்தில் அதில் தோனி பங்கேற்க வாய்ப்பே இல்லை. தேர்வுக் குழுவினர் தோனியின் பார்மை உறுதி செய்யாமல் அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்க மாட்டார்கள். ஐபிஎல் தொடர் நடக்கவும் இப்போதைக்கு வாய்ப்பு இல்லை. தோனியின் ஆசை நிறைவேறவும் வாய்ப்பு குறைவு தான்.