கொரோனா வைரஸ்
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விடவில்லை. இதுவரை 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
தள்ளி வைப்பு
இந்த நிலையில் மார்ச் 29 அன்று துவங்க இருந்த ஐபிஎல் தொடர் அதிரடியாக ஏப்ரல் 15க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரை எப்படியாவது நடத்துவதில் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அணிகள் தீவிரமாக உள்ளன.
எப்போது துவங்கும்?
ஐபிஎல் தொடர் நடக்காமல் போனால் பிசிசிஐக்கு மட்டுமே 2000 கோடி இழப்பு ஏற்படும். ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டாலும், எப்போது தொடங்கும் என்பதை யாராலும் உறுதியாக சொல்ல முடியாத நிலையே உள்ளது.
கங்குலி திட்டம்
இந்த நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலி ஐந்து தேதிகளை குறித்து வைத்துள்ளார். அதை ஐபிஎல் அணிகளிடமும் கூறி உள்ளார். எப்படியாவது இந்த ஐந்து தேதிகளில் ஒரு தேதியில் ஐபிஎல் தொடரை துவக்க வேண்டும் என அவர் திட்டமிட்டுள்ளார்.
ஐந்து தேதிகள்
அந்த ஐந்து தேதிகள் இது தான். ஏப்ரல் 15, ஏப்ரல் 21, ஏப்ரல் 25, மே 1 மற்றும் மே 5. இந்த ஐந்து தேதிகளுக்கும் தனித்தனி திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி கையில் இருக்கும் நாட்களுக்கு ஏற்ப அட்டவணை தயார் செய்யப்படும்.
நாள் குறைந்தால்..
ஏப்ரல் 25 வரை எப்போது ஐபிஎல் தொடங்கினாலும் தொடரை முழுமையாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி நடத்தினால் பல நாட்களில் இரண்டு போட்டிகள் நடைபெறும். ஒருவேளை மே மாதத்தில் போட்டி துவங்க வேண்டிய நிலை வந்தால் தான் சிக்கல்.
இரண்டு பிரிவுகள்
மே மாதத்தில் போட்டிகள் தொடங்கினால் தொடரை சுருக்க வேண்டும். ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒருமுறை மட்டுமே மோத வேண்டும் அல்லது எட்டு அணிகளும் இரு பிரிவுகளாக பிரிந்து லீக் சுற்றில் ஆட வேண்டும்.
விசா சிக்கல்
கொரோனா வைரஸ் பரவுவது ஒருபுறம் என்றால் அதனால் வெளிநாட்டில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. அதனால், வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஐபிஎல் தொடர் தாமதமாக அதுவும் ஒரு காரணம்.
கொரோனா வேகம்
கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்தால் கண்டிப்பாக ஐபிஎல் தொடரை நடத்த முடியாது என்பது நிச்சயம். எனினும், கங்குலி கொரோனா வைரஸ் வேகம் எப்போது தணிந்தாலும் அதை பயன்படுத்த வேண்டி சக்கர வியூகம் அமைத்துள்ளார்.