2020 ஐபிஎல் நிலை
2020 ஐபிஎல் தொடர் மார்ச் 29 அன்று மும்பையில் துவங்க இருந்தது. ஆனால், அதற்கு முன் கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் பரவி இந்தியாவையும் வந்தடைந்தது. இந்தியாவில் இதுவரை 80க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிசிசிஐ தள்ளி வைப்பு
இந்த நிலையில் பிசிசிஐ ஐபிஎல் தொடரை தள்ளி வைத்துள்ளது. ஏப்ரல் 15 வரை ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஐபிஎல் தொடர் துவங்குமா? என்பதும் கேள்விக் குறியாகவே உள்ளது.
நஷ்டம் ஆகும்
ஐபிஎல் தொடரை ரத்து செய்தால் பிசிசிஐக்கு மட்டும் 2000 கோடி இழப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. ஐபிஎல் அணிகளுக்கும் கடும் நஷ்டம் ஏற்படும். அதனால், தொடரை ரத்து செய்யாமல் தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளது பிசிசிஐ.
அடுத்த கட்டம் என்ன?
ஏப்ரல் 15க்கு பின் நிலைமை கட்டுக்குள் வரும் பட்சத்தில் ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் போட்டிகளை நடத்த பிசிசிஐ எண்ணி வருகிறது. கடந்த சில நாட்களில் உலகம் முழுவதும் பல விளையாட்டுத் தொடர்கள் அப்படித் தான் நடந்தன.
இதுவும் ஆபத்து தான்
ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்தினால் யாருக்கும் கொரோனா வைரஸ் பரவாது என பலரும் கருதி வந்த நிலையில், இப்படி போட்டி நடத்துவதும் ஆபத்தானது தான் என இத்தாலியில் நடந்த பாதிப்பின் மூலம் தற்போது தெரிய வந்துள்ளது.
சீரி ஏ தொடர்
இத்தாலியில் கொரோனா வைரஸ் தலை விரித்து ஆடுகிறது., சீனாவுக்கு அடுத்து அங்கே தான் கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவி உள்ளது. இந்த நிலையில், அங்கே கடந்த சில நாட்கள் முன்பு வரை சீரி ஏ தொடரின் கால்பந்துப் போட்டிகள் நடைபெற்று வந்தன.
மூடப்பட்ட மைதானம்
சீரி ஏ தொடரின் போட்டிகள் ரசிகர்கள் இல்லாத மூடப்பட்ட மைதானத்தில் நடைபெற்று வந்தது. அதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என முதலில் கருதப்பட்டது. பின் ஒரு வீரருக்கு மட்டும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
ஐந்து வீரர்கள் பாதிப்பு
அதைத் தொடர்ந்து ஐந்து சீரி ஏ வீரர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் இல்லாத மூடப்பட்ட மைதானத்திலும், வேறு வழிகளில் கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஐபிஎல் வீரர்கள்
இந்த நிலையில், ஐபிஎல் தொடரை ரசிகர்கள் இல்லாமல் நடத்தினாலும், போட்டிகளில் ஆடும் இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது. ஒரு வீரருக்கு பரவினாலும் அது அனைத்து வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பரவக் கூடும்.
கங்குலி முடிவு
எனவே, ஐபிஎல் தொடரை மூடப்பட்ட மைதானத்திலும் நடத்துவது ஆபத்து தான். பிசிசிஐ தலைவர் கங்குலி நிச்சயம் ஐபிஎல் தொடரை வீரர்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் நடத்தக் கூடாது. தொடரை ரத்து செய்வது தான் ஒரே வழி. கங்குலி என்ன செய்யப் போகிறார்?