கொரோனா வைரஸ் பாதிப்பு
2020ஆம் ஆண்டை புரட்டிப் போட்டு நாசம் செய்துள்ளது கொரோனா வைரஸ். உலகம் முழுவதும் சுமார் 3,40,000 பேர் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 14,000 பேர் வரை இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை தினமும் உயர்ந்து வருகிறது.
ஸ்தம்பித்த விளையாட்டுக்கள்
கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டும், தள்ளி வைக்கப்பட்டும் உள்ளன. கிரிக்கெட் போட்டிகளும் ஸ்தம்பித்து உள்ளன. சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஐபிஎல் தள்ளி வைப்பு
2020 ஐபிஎல் தொடர் மார்ச் 29 அன்று துவங்க இருந்தது. அந்த தொடரும் ஏப்ரல் 15 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன் பின் ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து பல்வேறு தகவல்கள் தினமும் வெளியான வண்ணம் உள்ளது. மறுபுறம் கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது.
பிசிசிஐ எதிர்பார்ப்பு
பிசிசிஐ நிச்சயம் ஐபிஎல் தொடரை நடத்தி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தது. ஏப்ரல் மாதம் போனால் கூட, மே மாத துவக்கத்தில் ஐபிஎல் தொடரை நடத்தி விடலாம் என திட்டமிட்டு வந்தது. அப்படி நடந்தால் தொடரை முழுமையாக நடத்தலாம் என்ற எண்ணத்தில் இருந்தது.
மக்கள் ஊரடங்கு
மறுபுறம், இந்தியாவில் சில நாட்கள் முன்பு வரை 100க்கும் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 425ஆக உயர்ந்துள்ளது. மாநில அரசுகள் மக்களை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து கட்டுப்படுத்தி வருகின்றன. அதனால், தொழில் துறைகளும் ஸ்தம்பித்து போய் உள்ளன.
வாய்ப்பே இல்லை
ஐபிஎல் தொடரை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடத்தினால் வெளிநாட்டு வீரர்கள் அவர்கள் நாட்டுக்காக கிரிக்கெட் போட்டிகளில் ஆட வேண்டிய நிலை உள்ளது. அதனால், ஐபிஎல் தொடரை மே மாதத்திற்குள் துவங்காவிட்டால் அதன் பின் முழுமையாக நடத்தவே முடியாது.
நம்பிக்கை இழந்த அணிகள்
இந்த சூழ்நிலைகளை கண்டு வரும் ஐபிஎல் அணிகள் நம்பிக்கை இழந்துள்ளன. குறிப்பாக, இந்தியாவில் தினமும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து வருகிறது. அதனால் ஐபிஎல் தொடர் இப்போதைக்கு துவங்க வாய்ப்பு இல்லை.
மார்ச் மாத இறுதி
இந்த நிலையில் தான் பிசிசிஐ வரும் மார்ச் இறுதிக்குள் ஐபிஎல் தொடர் குறித்த முக்கிய முடிவை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பு இருக்கும் நேரத்தில் ஐபிஎல் தொடரை நடத்துவது பற்றி பேசினால் கடும் எதிர்வினை ஏற்படும்.
அந்த முடிவு
அதனால், பிசிசிஐ ஐபிஎல் தொடரை பல மாதங்கள் தள்ளி வைப்பது அல்லது கை விடுவது என்ற அதிரடி முடிவை தான் எடுக்கும் என பிசிசிஐ வட்டாரம் கூறுகிறது. கொரோனா பாதிப்புக்கு பிசிசிஐ நிதி வழங்கும் முடிவையும் அப்போது எடுக்கக் கூடும்.