வெந்த புண்ணில்..
ஐபிஎல் டி20 தொடர் இந்த வருடம் நடக்குமா? என்பதே கேள்விக் குறியாக உள்ளது. ஐபிஎல் நடக்காது என்ற முடிவில் இருக்கும் ஐபிஎல் அணிகள் நஷ்டக் கணக்கை எண்ணி வயித்தெரிச்சலில் உள்ளனர். இந்த நேரத்தில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தன் லாபக் கணக்கை சொல்லி வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி உள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர்
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் பாகிஸ்தானில் இந்த ஆண்டு நடைபெற்றது. கடந்த ஆண்டுகளில் பாகிஸ்தான் சென்று போட்டிகளில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்கள் சம்மதம் தெரிவிக்காததால் ஐக்கிய அரபு அமீரகத்தில் அந்த தொடர் நடந்து வந்தது. இந்த முறை சொந்த மண்ணில் நடந்தது.
கொரோனா ஆபத்து
இந்த தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் பாதி நடந்து கொண்டிருக்கும் போதே கொரோனா வைரஸ் ஆபத்து இருந்தது. அதையும் மீறி லீக் சுற்றின் கடைசி நான்கு போட்டிகள் ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் நடந்தது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் தேதி மாற்றப்பட்டு முன்னதாகவே நடக்க இருந்தது.
அலெக்ஸ் ஹேல்ஸ் நிலை
ஆனால், தொடரின் பாதியில் கொரோனா குறித்த அச்சத்தால் இங்கிலாந்து கிளம்பிச் சென்ற அலெக்ஸ் ஹேல்ஸ், தனக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதற்கான அறிகுறி இருப்பதாக தகவல் அனுப்பினார். அது வீரர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.
அரையிறுதி ரத்து
இந்த நிலையில், அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு, அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி நடக்கும் முன்னரே தொடரை ரத்து செய்தது.
லாபம் உறுதி
இருந்தாலும் தங்களுக்கு லாபம் கிடைக்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகி ஒருவர் கூறி இருக்கிறார். ஒளிபரப்பு, டிஜிட்டல் ஊடகம் என நான்கு வழிகளில் தங்களுக்கு பணம் வர உள்ளதாகவும், அதனால் நிச்சயம் லாபம் தான் என அவர் கூறி உள்ளார்.
கடந்த தொடர்களில் நஷ்டம்
கடந்த தொடர்கள் அனைத்தும் வெளிநாட்டில் நடந்ததால் விளம்பரதாரர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டவில்லை என்றும், இந்த முறை ரசிகர்கள் நிறைந்த மைதானத்தில் தொடர் நடந்ததால் அதிக வருவாய் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஐபிஎல் தள்ளி வைப்பு
பாகிஸ்தான் சூப்பர் லீக் குஷியில் இருக்கும் அதே நேரத்தில், உலகின் பிரம்மாண்ட டி20 தொடரான ஐபிஎல் பரிதாப நிலையில் உள்ளது. மார்ச் 29 அன்று துவங்க வேண்டிய தொடரை கொரோனா ஆபத்து காரணமாக ஏப்ரல் 15 வரை தள்ளி வைத்துள்ளது பிசிசிஐ.
ஐபிஎல் நஷ்டம்
கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படும் என்ற பேச்சும் அதிகரித்து வருகிறது. சில ஐபிஎல் அணிகள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடக்காது என்ற முடிவுக்கே வந்து, நஷ்டக் கணக்கை கணக்கிட்டு வருவதாக கூறப்படுகிறது.
எப்படி இருந்தாலும் லாபம்
இப்படிப்பட்ட சூழலில் தான் பாகிஸ்தான் சூப்பர் லீக் தங்களுக்கு லாபம் என குஷியில் குதித்துக் கொண்டு இருக்கிறது. ஐபிஎல் அணிகள் மற்றும் பிசிசிஐ வரும் செவ்வாய் அன்று கூட்டம் போட்டி ஐபிஎல் எதிர்காலம் பற்றி பேச உள்ளன.
யப்பா பாகிஸ்தான் சூப்பர் லீக்.. பிசிசிஐ, ஐபிஎல் அணிகளின் வயித்தெரிச்சலை கொட்டிக்காம போங்கப்பா அப்படி!