ரெய்னா விலகல்
2020 ஐபிஎல் தொடருக்கு முன் சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் சுரேஷ் ரெய்னாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக அவர் அந்த சீசனில் இருந்தே விலகியதாக கூறப்பட்டது. ரெய்னா தான் ஐபிஎல் போட்டிகள் துவங்கும் முன் சிஎஸ்கே அணியுடன் இணைய ஆவலாக உள்ளதாக சமாதானம் செய்ய முயன்றார்.
தவிக்கவிட்ட சிஎஸ்கே
ஆனால், சிஎஸ்கே அணி சுரேஷ் ரெய்னாவை கடைசி வர அழைக்காமல் தவிக்க விட்டது. அவர் இல்லாமலேயே 2020 ஐபிஎல் தொடரில் பங்கேற்றது சிஎஸ்கே. அவர் இல்லாததால் மிடில் ஆர்டரில் சரிவை சந்தித்த சிஎஸ்கே அணி மோசமான தோல்விகளை சந்தித்து பிளே-ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறாமல் போனது.
எந்த அணியாவது தேர்வு செய்யுமா?
இந்த நிலையில், 2021 ஐபிஎல் தொடரில் ஐபிஎல் ரன் மெஷின் ஆன சுரேஷ் ரெய்னாவை எந்த அணியாவது வாங்குமா? என்ற கேள்வி இருந்தது. சிஎஸ்கே அணி வாங்காவிட்டாலும் வேறு அணிகள் அவரது ஐபிஎல் அனுபவத்துக்காக அவரை தங்கள் அணியில் தேர்வு செய்யக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஐபிஎல் மாற்றம்
இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடரில் பெரிய மாற்றங்களை செய்ய திட்டமிட்டு வருகிறது பிசிசிஐ. 2020 ஐபிஎல் தொடர் பெரிய வெற்றி பெற்றாலும் கொரோனா வைரஸ், சீன ஸ்பான்சர் உள்ளிட்ட பிரச்சனைகளால் வருமானம் வெகுவாக பாதிக்கப்பட்டது.
9வது ஐபிஎல் அணி
அதை ஈடுகட்ட 9வது ஐபிஎல் அணியை அறிமுகம் செய்ய உள்ளது பிசிசிஐ. கங்குலி அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதாக பிசிசிஐ வட்டாரம் கூறி உள்ளது. இந்த மாற்றம் தான் சுரேஷ் ரெய்னாவுக்கு பெரிய அதிர்ஷ்டமாக மாற வாய்ப்பு உள்ளது.
குஜராத் அணி
புதிய ஐபிஎல் அணி அஹமதாபாத்தை மையமாக வைத்து செயல்படும் என கூறப்படுகிறது. சிஎஸ்கே அணி தடை செய்யப்பட்ட போது குஜராத் லயன்ஸ் என்ற அணி அறிமுகம் செய்யப்பட்டது. அந்த அணிக்கு சுரேஷ் ரெய்னா கேப்டனாக பதவி வகித்தார்.
ரெய்னாவை தேர்வு செய்யுமா?
தற்போது குஜராத் தலைநகர் அஹமதாபாத்தை மையமாக வைத்து புதிய அணி செயல்பட உள்ள நிலையில், மீண்டும் பழைய குஜராத் லயன்ஸ் அணியை கட்டமைக்க புதிய உரிமையாளர்கள் முயற்சி செய்யக் கூடும். அப்படி நடந்தால் சுரேஷ் ரெய்னா அந்த அணியில் தேர்வு செய்யப்படுவார்.
கேப்டன் பதவிக்கு வாய்ப்பு
சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் அதிக அனுபவம் கொண்ட வீரர் என்பதாலும், அதிக முறை பிளே-ஆஃப் சென்ற சிஎஸ்கே அணியின் துணை கேப்டனாக இருந்தவர் என்பதாலும், முந்தைய குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் என்பதாலும் அவருக்கு மீண்டும் கேப்டன் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
நடக்காமலும் போகலாம்
ஒருவேளை புதிதாக வரும் ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் இளம் வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களை கொண்டு தங்கள் அணியை கட்டமைக்க விரும்பினால் சுரேஷ் ரெய்னாவுக்கு அந்த அணியில் வாய்ப்பு கிடைக்காமலும் போகலாம்.