ஜாம்ஷெட்பூர் : ஜாம்ஷெட்பூரில் நேற்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் எஃப்சி கோவா அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்றுள்ள கோவா அணியின் தலைமைப் பயிற்சியாளர் செர்ஜியோ லோபெரா, இதற்காக கோவா அணி ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரினார்.
நேற்று நடைபெற்ற அந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணி மைக்கேல் சூசைராஜின் ஆதிக்கம் மற்றும் மிமோ, சுமித் பாஸி ஆகியோரின் கோல்கள் அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
விளையாட்டிற்குப் பிறகு, லோபரா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கும் மனநிலையில் தான் இருந்தார். ஏனெனில் வழக்கத்திற்கு மாறாக கோவா அணியின் செய்லபாடுகள் அத்தனை சிறப்பானதாக இல்லாமல் இருந்ததே காரணம்.
ஜாம்ஷெட்பூர் அணியினர் எங்கள் அணியைவிட மிகச் சிறப்பாக விளையாடினர். இதற்காக அந்த வீரர்களை வாழ்த்துவதாக தெரிவித்த செர்ஜியோ லோபெரா, தங்கள் அணி ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்பதாக தெரிவித்தார். இது எங்களுக்கு ஒரு மோசமான ஆட்டம் என்றும், ரசிகர்களே இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பயிற்சியாளரான லோபெரா கோவா அணிக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு பயிற்சியாளராக பொறுப்பேற்றதில் இருந்து இது போன்ற ஒரு மோசமான தோல்வியை சந்தித்ததில்லை.
இது குறித்து கருத்துத் தெரிவித்த அவர் எனது தலைமையிலான பயிற்சியில் கோவா அணி மோசமான தோல்வி அடைந்திருப்பது தனக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், இதைத் தொடர்ந்து அணி வீரர்களுக்கு கடுமையான பயிற்சி அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
கோவா அணியின் நட்சத்திர வீரரான பெர்ரான் கொரோமினாஸ்க்கு புனே அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது சிவப்பு அட்டை வழங்கப்பட்டதால் அவரால் நேற்றைய ஆட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை தந்ததாக லோபெரா கூறினார்.
அதே நேரத்தில் கொராமினாஸ் என்ற தனிப்பட்ட வீரர் விளையாடவில்லை என்பதால்தான் தோல்வி அடைந்தோம் என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்றும் பொதுவாக எங்கள் அணியினர் சிறப்பாக விளையாடவில்லை என்றும் லோபெரா தெரிவித்தார்.
ஜாம்ஷெட்பூர் அணி எப்படி விளையாடும் என்று எங்களுக்குத் தெரியும், அந்த வீரர்கள் கடுமையான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எங்கள் வீரர்களிடம் தெரிவித்திருந்தேன். ஆனால் அதற்கேற்றவாறு நாங்கள் விளையாடவில்லை என்பதால் தோல்வி அடைந்தோம் என லோபெரா கூறினார்.
பொதுவாக கோவா அணி வீரர்கள் எப்போதுமே எதிர்த் தாக்குதல் நடத்திதான் விளையாடுவார்கள். ஆனால் நேற்று ஜாம்ஷெட்பூர் அணி வீரர்கள் தடுப்பாட்டத்தை கையில் எடுத்து ஆடியதால் எங்கள் அணி வீரர்கள் விரக்தியடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
நாங்கள் தடுப்பாட்டத்தை ஆட வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் ஜாம்ஷெட்பூர் அணியினர் தடுப்பாட்டத்தை ஆடியதால் அவர்களிடம் இருந்து எங்களை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக லோபேரா தெரிவித்தார்.