வயது மோசடி
கிரிக்கெட்டில் வேகமாகவும், எளிதாகவும் முன்னேற சில இளம் வீரர்கள் தங்கள் வயதை குறைத்துக் காட்டி அண்டர் 16, அண்டர் 19 அணிகளில் இடம் பெறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
பின்விளைவுகள்
அதன் மூலம், எளிதாக ஐபிஎல் அணிகள் அல்லது தேசிய அணியின் கவனத்தை ஈர்த்து முன்னேறத் துடிக்கின்றனர். ஆனால், அதன் பின்விளைவுகளை பற்றி அவர்கள் கவலைப்படுவதாக தெரியவில்லை. பெரிய தண்டனைகள் எதுவும் இல்லாததும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.
பாகிஸ்தான் குளறுபடி
இந்த விஷயத்தில் பாகிஸ்தான் பல ஆண்டுகளாகவே பல சர்ச்சைகளை சந்தித்துள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரரும் ஆன ஷாஹித் அப்ரிடி வயது குறித்த சர்ச்சை அவர் ஆடத் துவங்கிய நாள் முதல் அவர் ஓய்வு பெற்று விட்ட இந்த காலம் வரை தொடர்ந்து வருகிறது.
இரு பாகிஸ்தான் வீரர்கள்
சமீபத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆன இரு பாகிஸ்தான் இளம் வேகப் பந்துவீச்சாளர்கள் நசீம் ஷா மற்றும் முகமது மூஸா ஆகியோரின் வயது 16 என்பதை பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அது குறித்த சர்ச்சை எழுந்து அடங்கியது.
இந்தியாவிலும் அதிகம்
இந்தியாவிலும் இந்த பிரச்சனை நீண்ட காலமாக உள்ளது. இந்திய அணியில் சில காலம் ஆடிய அமித் மிஸ்ராவின் வயது அதிகம் என்ற கருத்து பரவலாக இருந்தது. சேவாக் போன்ற சிலர் இது குறித்து வெளிப்படையாகவே பேசி உள்ளனர்.
இரு வீரர்கள்
பிசிசிஐ தலைவராக கங்குலி வந்த பின் இந்த வயது மோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்து இருந்தார். அதன்படி, பிசிசிஐ நடவடிக்கைகள் துவங்கி உள்ளன. அந்த விசாரணை வளையத்தில் நிதிஷ் ராணா, சிவம் மாவி என்ற இரு வீரர்கள் சிக்கி உள்ளனர்.
நிதிஷ் ராணா தடை
நிதிஷ் ராணா கடந்த 2015ஆம் ஆண்டில் வயது மோசடி காரணமாக தடை செய்யப்பட 22 வீரர்களில் ஒருவர் ஆவார். அவர் வயது சார்ந்த அணிகளில் இடம் பெற தகுதி அற்றவர் ஆவார். தற்போது 26 வயதாகும் நிலையில், அவரது பழைய வயது மோசடி குறித்து மீண்டும் பிசிசிஐ தூசி தட்டி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
சிவம் மாவி நிலை
அதே போல, இளம் உத்தர பிரதேச அணிக்காக ஆடி வரும் சிவம் மாவி கடந்த 2018ஆம் ஆண்டு அண்டர் 19 அணியில் இடம் பெற்று அதிரடியாக ஆடினார். அவரும் வயது மோசடி வழக்கில் சிக்கி இருக்கிறார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி
சிக்கலில் இருக்கும் இந்த இரு வீரர்களும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் கொல்கத்தா அணியில் 2020 ஐபிஎல் தொடரில் முக்கிய வீரர்களாக இருப்பார்கள் என கருதப்படுகிறது.
சிக்கலில் கொல்கத்தா அணி
அதனால், கொல்கத்தா அணி இருவரின் விசாரணையையும் தீவிரமாக எதிர்கொண்டு இருக்கிறது. இளம் வீரர் சிவம் மாவியின் எதிர்காலமும் கேள்விக் குறியாகி இருக்கிறது.