3 ஆட்டங்களிலும் அணிகள் மோதல்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் சர்வதேச டி20, சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி தொடர்கள் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் விளையாடிய டி20 தொடரில் இந்திய அணி நியூசிலாந்தை வெற்றி கொண்டுள்ளது.
அணி வீரர்களுக்கு பாராட்டு
ஹாமில்டனில் நேற்று நடைபெற்ற 3வது சர்வதேச டி20 போட்டியை சமன் செய்த இந்திய அணி சூப்பர் ஓவரை ஆடி, அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து பேசிய விராட் கோலி ஆட்டத்தை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்ற பௌலர் முகமது ஷமி மற்றும் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார். தோல்வியை நோக்கி சென்ற போட்டியை வெற்றியின் பக்கம் இந்த இருவரும் இழுத்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொண்டாடும் விராட் கோலி
இந்த வெற்றி தந்த உற்சாகத்தை இயற்கையுடன் செலவழிக்க விரும்பிய விராட் கோலி, அங்குள்ள ஏரி ஒன்றில் தன்னுடைய நேரத்தை செலவிட்டார். சுற்றிலும் மரங்கள் சூழ்ந்த அந்த ஏரியின் அருகில் இருந்த படிக்கட்டில் அமர்ந்தபடி அதை ரசித்த விராட் கோலி, அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, வாழ்க்கை ஒரு வரம் என்ற கேப்ஷனுடன் அதை பகிர்ந்தார்.
16 லட்சம் லைக்குகள்
இந்த புகைப்படத்தை விராட் கோலி பகிர்ந்த 4 மணிநேரங்களில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் லைக்குகளால் அவரை திக்கு முக்காட செய்தனர். ஏராளமானோர் கமெண்ட்டுகளையும் பதிவிட்டனர். தான் பதிவிடும் புகைப்படங்களால் இன்ஸ்டாகிராமில் விராட் கோலி தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ள நிலையில், அவர் பகிர்ந்த இந்த புகைப்படம் சில மணிநேரங்களிலேயே வைரலானது.
இன்னும் இரண்டு போட்டிகள்
நியூசிலாந்துடனான தொடரை 3 போட்டிகளின் தொடர் வெற்றிமூலம் கைப்பற்றியுள்ள இந்திய அணி, அடுத்ததாக வெல்லிங்டனில் நான்காவது போட்டியையும், ஐந்தாவது போட்டியை மாங்கானுய் மலையிலும் விளையாட உள்ளனர். இந்த இரு போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் 5 போட்டிகளையும் வெல்ல தீவிரம் காட்டப்படும் என்றும் ஏற்கனவே விராட் கோலி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.