2 ஆண்டுகள் தடை
அதன்படி., அண்டர் 19 அணியில் சிறப்பாக ஆடியவரும், தற்போதைய டெல்லி ரஞ்சி அணியில் இடம் பெற்று இருப்பவரும் ஆன மன்ஜோத் கல்ரா என்ற வீரருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது டெல்லி கிரிக்கெட்.
அண்டர் 19 உலகக்கோப்பை
2018ஆம் ஆண்டு நடந்த அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் இந்தியா சார்பில் கலந்து கொண்டார் மன்ஜோத் கல்ரா. அந்த தொடரில் சிறப்பாக ஆடினார் அவர். அதே தொடரில் தான் ப்ரித்வி ஷா, ஷுப்மன் கில் உள்ளிட்டோரும் ஆடினர்.
இறுதிப் போட்டியில் சதம்
அந்த தொடரின் இறுதிப் போட்டியில் சதம் அடித்த மன்ஜோத் கல்ரா அப்போது பரபரப்பாக பேசப்பட்டார். டெல்லி கேபிடல்ஸ் ஐபிஎல் அணியால் ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டார்.
ரஞ்சி ட்ராபி அணி
தொடர்ந்து டெல்லி ரஞ்சி ட்ராபி அணியில் கூட இடம் பெற்றார். அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாக கணிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் வயது மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
தடை உத்தரவு
அதன் மீது டெல்லி கிரிக்கெட் அமைப்பால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி பதார் துராஸ் அஹ்மது விசாரணை மேற்கொண்டார். அதன் முடிவில் அவரை இரண்டு ஆண்டுகள் தடை செய்து உத்தரவிட்டார்.
போட்டியில் பங்கேற்க முடியாது
அதன்படி வயது சார்ந்த அணிகளில் மன்ஜோத் கல்ரா அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பங்கேற்க முடியாது. ஒரு ஆண்டு முழுவதும் எந்த கிரிக்கெட் போட்டியிலும் அவர் பங்கேற்க முடியாது.
ரஞ்சி தொடரில் ஆட முடியாது
இரண்டாவது ஆண்டு முதல் வயது சாராத அணிகளில் அவர் இடம்பெறலாம். கிளப் போட்டிகள் போன்றவற்றில் பங்கேற்கலாம் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதனால், நடப்பு ரஞ்சி தொடரில் அவர் ஆட முடியாது.
நிதிஷ் ராணா மீது புகார்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் நிதிஷ் ராணா என்ற வீரர் மீதும் வயது மோசடி புகார் உள்ளது. அவர் ஏற்கனவே 2015இல் தண்டனை பெற்ற நிலையில், அவர் மீது மீண்டும் புகார் எழுந்துள்ளது.
2020 ஐபிஎல் பாதிக்கும்
இந்த முறை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக வரும் 2௦20 ஐபிஎல் தொடரில் ஆட முடியாத நிலை ஏற்படும்.
எச்சரிக்கை
இந்த நடவடிக்கைகள் இளம் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்பு வயது மோசடி செய்தால் பெரிய அளவில் நடவடிக்கை இருக்காது என்ற நிலை இருந்தது. ஆனால், இனி தடை விதிக்கப்படும் என்பதால், இளம் வீரர்கள் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.