இந்தியாவை வம்பிழுத்த சோயிப் அக்தர்.. ஒரே வார்த்தையில் துவம்சம் வெய்த முகமது ஷமி.. ரசிகர்களும் ஆதரவு
மெல்போர்ன் : டி20 உலககோப்பையில் இறுதிப் போட்டிக்கு வந்த பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. அரையிறுதிக்கே வர முடியாத பாகிஸ்தான் அணிக்கு, நெதர்லாந்து உதவி கிடைத்தது பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
ஆனால் ஏதோ பாகிஸ்தான் சொந்த முயற்சியில் வந்தது போல் , அந்த அணி ரசிகர்கள் கொண்டாடினர். கொண்டாடியதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் இந்தியாவை தேவை இல்லாமல் விமர்சனம் செய்தனர்.
குறிப்பாக, பாகிஸ்தான் அணி வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர், இந்திய வீரர்களை கடுமையாக விமர்சனம் செய்தார்.

எல்லை மீறிய விமர்சனம்
அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவித்த அவர், பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும் தகுதி இந்தியாவுக்கு இல்லை என்று கூறினார். மேலும், இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை கடுமையாக விமர்சித்த சோயிப் அக்தர், சில சமயங்களில் எல்லை மீறி இந்திய அணியையும் கிண்டல் செய்தார்.

முகமது ஷமி பதிலடி
இந்த நிலையில், நேற்று இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வியை தழுவிய நிலையில், சோயிப் அக்தர், இதயம் நொறுங்கிய படத்தை டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த முகமது ஷமி, மன்னிக்கவும் சகோதரரே, கர்மா இப்படி தான் திருப்பி கொடுக்கும் என்று பதில் அளித்தார்.

கர்மா
இந்திய அணியை வரம்பு மீறி விமர்சனம் செய்த நிலையில், தற்போது பாகிஸ்தான் தோற்றதால் அதனை கிண்டல் செய்யும் வகையில் முகமது ஷமி ஒரே வார்த்தையால் நீங்கள் செய்தது உங்களுக்கே வந்துவிட்டது என்ற பொருள்படும் வகையில் கூறினார். முகமது ஷமியின் இந்த பதிலை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்கள் ரியாக்ஷன்
முகமது ஷமி சரியான பதிலடியை கொடுத்து இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். எனினும் ஷமியின் இந்த பதில் பாகிஸ்தான் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. கடந்த டி20 உலககோப்பையின் போது, முகமது ஷமியை இந்திய ரசிகர்கள் சிலர் விமர்சனம் செய்த போது, அதனை பாகிஸ்தான் வீரர்கள் தட்டி கேட்டதாகவும், ஆனால் தற்போது ஷமியின் இந்த செயல் அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications