மும்பை: பெங்களூரு அணிக்கு எதிராக மும்பையில் நடக்கும் ஐபிஎல் போட்டியில், சிக்சர்கள் அடிப்பதில் புதிய சாதனைகளைப் படைத்தார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் சீசன் 11 நடந்து வருகிறது. மும்பையில் நடக்கும் இந்த சீசனின் 14வது ஆட்டத்தில் மும்பை இந்தியன் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 52 பந்துகளில் 10 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 94 ரன்கள் எடுத்தார். இந்த சீசனின் முதல் சதத்தை அடிக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டார்.
அதே நேரத்தில், இந்த சீசனின் முதல் சிக்சரை அடித்த ரோரஹித், சீசனின் 200வது சிக்சரையும் அடித்துள்ளார். இதைத் தவிர, ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடும் கிறிஸ் கெயில், 102 போட்டிகளில் 269 சிக்சர்கள் அடித்துள்ளார். சிஎஸ்கேவின் சின்ன தல சுரேஷ் ரெய்னா 163 போட்டிகளில் 174 சிக்சர்கள் அடித்துள்ளார். தனது 163வது போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா, 179 சிக்சர்களுடன் தற்போது அதிக சிக்சர் அடித்தோர் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
இதுவரை நடந்துள்ள 10 சீசன்களில், 2012ல் அதிகபட்சமாக 732 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. அதற்கடுத்து, 2014ல் 714, 2015ல் 692, 2013ல் 674, 2011ல் 639, 2008ல் 622, 2010ல் 585, 2009ல் 506 சிக்சர்கள் அடிக்கப்பட்டன.