கொழும்பு: முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.
இந்தியா, இலங்கை, வங்தேசம் ஆகிய 3 அணிகள் பங்கேற்கும், நிடாஹஸ் கோப்பைக்கான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்காவில் விளாசிய அதே ஃபார்மை தொடர்ந்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அதிகபட்சமாக 90 ரன்கள் குவித்தார்.
இந்த தொடரில் இந்திய அணிக்கு, கேப்டனாக செயல்படும் ரோஹித் ஷர்மா நேற்றைய போட்டியில் டக்அவுட்டானார்.
இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கிய இலங்கை அணி ஆரம்பத்திலேயே அதிரடியை காட்டியது. 9 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில், இலங்கை அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக குஷால் பெரேரா 66 ரன்களை விளாசினார்.
இதையடுத்து வரும் 8ம் தேதி வங்கதேசத்தை இந்தியா எதிர்கொள்கிறது.
இலங்கையில் இரு தரப்பினர் இடையே வன்முறை ஏற்பட்டதால் அந்நாட்டு அரசு 10 நாட்களுக்கு அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளது. இருப்பினும் கிரிக்கெட் போட்டிகள் தடையின்றி நடைபெறும்.