பிசிசிஐ கதவை திறந்தாலும்.. வழி தெரியாமல் திணறும் வடகிழக்கு கிரிக்கெட் அணிகள்!
மும்பை : சில நாட்கள் முன்பு, பிசிசிஐ 2018-19 சீசனுக்கான, உள்ளூர் தொடர்கள் அட்டவணையை வெளியிட்டது. மொத்தம் 37 அணிகளுக்கான, இந்தப் பட்டியலில் ஆண்கள், பெண்கள் என்ற பிரிவுகளில் சுமார் 2000 போட்டிகள் இடம் பெற்றுள்ளது. இதில் பல புதிய அணிகளுக்கு, மைதானங்கள், பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்த தேவையான பணம், என பல வசதிகள் இல்லை. இதனால், உள்ளூர் கிரிக்கெட் அணிகள் பதில் தெரியாத பல கேள்விகளோடு இருக்கிறார்கள்.
இந்திய முதல் தர கிரிக்கெட்டை பொறுத்தவரை, ரஞ்சி ட்ராபி மிகவும் முக்கியமான ஒரு தொடர். தற்போது சென்ற ஆண்டை விட கூடுதலாக பத்து அணிகள், இந்த தொடரில் பங்கேற்க உள்ளனர். இதில் பெரும்பாலான அணிகள், வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவை.

இந்த மாநிலங்களை சேர்ந்த கிரிக்கெட் அணிகளின் நிர்வாகிகள், எங்கே தொடங்குவது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள். இந்த அணிகளுக்கு என சொந்தமான மைதானங்கள் இல்லை. ஒரே நேரத்தில் 16 வயது, 19 வயது, மற்றும் 23 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆடக்கூடிய போட்டிகளை வைத்தால், இந்த புதிய அணிகளுக்கு வீரர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது.
இது மட்டுமில்லாமல், வீரர்களுக்கு பயிற்சி அளிக்க இடமில்லாமல், அருகாமை மாநில கிரிக்கெட் மைதானங்களை பயன்படுத்தலாமா? என்ற நிலையில் இருக்கிறார்கள். சரி, அப்படி பயன்படுத்தி கொள்ளுங்கள், என்று சொன்னால் அடுத்து, அவர்கள் பிரச்சனை போக்குவரத்து, தங்குமிடம், உணவு ஆகியவற்றுக்கு ஆகும் செலவுகள் செய்ய பணமில்லை. இப்படி, நீண்டுகொண்டே செல்கிறது இந்த பற்றாக்குறை பட்டியல்.
மைதானம், பணம் இவையெல்லாம் கூட சரி செய்து விடலாம். அருணாச்சல் பிரதேசத்தை சேர்ந்த ஒரு கிரிக்கெட் நிர்வாகி, ரஞ்சி ட்ராபி அணியில் விளையாட வீரர்களுக்கான வயது வரம்பு என்ன என கேட்டுள்ளார். ஒருவேளை, பத்தொன்பது வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும் என்றால் அவர்களிடம் வீரர்கள் இல்லை. இப்படி, பல வழிகளிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இதுவரை வாய்ப்பில்லாமல், முடங்கி இருந்த வடகிழக்கு மாநில கிரிக்கெட் அணிகள், தற்போது வாய்ப்பு கிடைத்தும் சரியான வழிகாட்டல்கள் மற்றும் பண உதவி இல்லாமல் தடுமாறி வருகிறார்கள்.
Story first published: Saturday, July 21, 2018, 16:01 [IST]
Other articles published on Jul 21, 2018


Click it and Unblock the Notifications