டி20 உலககோப்பை
பாகிஸ்தானின் பலம் என்றாலே அதன் வேகப்பந்துவீச்சு தான். டி20 உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றத்துக்கு முக்கிய காரணம் ஷாகின் ஷா அப்ரிடி தான். அவர் தனது இடது கை வேகப்பந்துவீச்சால் இந்திய அணியின் தொடக்க வீரர்களை ஆட்டமிழக்க செய்தார். அவரை எதிர்கொள்வதே இந்திய அணி வீரர்களுக்கு கடும் நெருக்கடியாக இருந்தது. ரோகித் சர்மாவை முதல் ஓவரிலும், கேஎல் ராகுலை மூன்றாவது ஓவரிலும் ஷாயின் ஷா ஆப்ரிடி ஆட்டமிழக்க செய்தார்.
நட்சத்திர வீரர்
அந்த போட்டியில் அவர் நான்கு ஓவர்கள் வீசி 31 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.40 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அப்ரிடி, தற்போது வரை 47 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பாகிஸ்தானுக்காக கடந்த ஆண்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையும் அவர் பெற்றிருந்தார்.
காயம்
இந்த நிலையில் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து அப்ரிடி விலகுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஏராளமானோர் இருந்தாலும் ஷாயின் ஷா அப்ரிடிக்கு நிகரான திறமையும் அனுபவம் மற்ற பந்துவீச்சாளர்களுக்கு இல்லை.
பெரும் பின்னடைவு
இதனால் ஆசிய கோப்பை தொடரை வெல்ல வேண்டும் என்ற பாகிஸ்தானின் கனவு கலைந்துள்ளது. ஆசிய கோப்பையில் அப்ரிடி இடம்பெறாமல் போனது மிகவும் துரதிஷ்டமான விஷயம் என பாகிஸ்தான் அணியின் துணை கேப்டன் ஷதாப்கான் கூறியுள்ளார். தற்போது ஷாயின் ஷா அப்ரிடி ஆறு வாரத்திற்கு ஓய்வில் இருக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.டி20 உலக கோப்பை அக்டோபர் மாதம் தொடங்கும் நிலையில் அதற்குள் ஷாயின் ஷா ஆப்ரிடி முழு உடல் தகுதியை எட்டுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.