544 ரன்கள் அடித்த எதிரணி
இந்தியா அணி டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் ஒரு பயிற்சிப் போட்டியில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணிக்கு ஆடியது. அந்த அணியில் கத்துக்குட்டி வீரர்களே இடம் பெற்று இருந்தனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 ரன்கள் எடுத்தது. அடுத்து கிரிக்கெட் ஆஸி. அணி பேட்டிங்கில் சிறப்பாக ஆடியது. 544 ரன்கள் குவித்தது அந்த அணி.
இது ஒரு விஷயமே இல்லை
இது பற்றி இந்திய வீரர் புஜாராவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர், "பயிற்சிப் போட்டியில் 500 ரன்கள் கொடுப்பது எல்லாம் ஒரு விஷயமே இல்லை. நாங்கள் அதைப் பற்றி கவலைப் படவில்லை" என்றார்.
திட்டம் இருக்கு
மேலும், "எங்கள் பந்துவீச்சாளர்கள் என்ன செய்ய வேண்டும் என தெரிந்து வைத்துள்ளனர். அவர்கள் என்ன திட்டம் வைத்துள்ளார்கள் என நான் கூற முடியாது. ஆனால், ஆஸ்திரேலியாவில் என்ன அளவில் பந்து வீச வேண்டும் என தெரிந்து வைத்துள்ளார்கள்" என கூறினார்.
அனுபவ பந்துவீச்சாளர்கள்
இந்திய டெஸ்ட் அணியில் தற்போது அஸ்வின், ஜடேஜா, புவனேஸ்வர், இஷாந்த் சர்மா உள்ளிட்ட அதிக அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இவர்கள் தவிர போதிய சர்வதேச அனுபவம் கொண்ட ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோரும் உள்ளனர். பயிற்சிப் போட்டியில் புவனேஸ்வர் குமார் பந்து வீசவில்லை. பும்ரா, குல்தீப் ஒரு ஓவர் மட்டுமே வீசினர்.
இந்தியா தடுமாற்றம்
இவர்கள் தவிர்த்து அனைத்து பந்துவீச்சாளர்களும் பந்து வீசியும் கத்துக்குட்டி அணியை வீழ்த்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் விக்கெட் விழாத நிலையில், விராட் கோலி நீண்ட காலம் கழித்து பந்து வீசினார். ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார் கோலி.
புஜாரா சப்பைக்கட்டு
இந்திய பந்துவீச்சில் நிலை இப்படி மோசமாக இருந்த நிலையில், புஜாரா சப்பைக்கட்டு கட்டி இந்திய பந்துவீச்சாளர்கள் சரியான திசையில் செல்வதாக கூறியுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் என்ன செய்கிறார்கள் என பார்ப்போம்.