மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணியின் சின்ன தல சுரேஷ் ரெய்னாவின் ஒரு சாதனையை மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முறியடித்தார். அவரைத் தொடர்ந்து ரெய்னாவின் மற்றொரு சாதனையை பெங்களூரு கேப்டன் விராட் கோஹ்லி முறியடித்தார்.
ஐபிஎல் டி-20 கிரிக்கெட் சீசன் 11 நடந்து வருகிறது. மும்பையில் நடக்கும் இந்த சீசனின் 14வது ஆட்டத்தில் மும்பை இந்தியன் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது.
இந்த சீசனின் முதல் சிக்சரை அடித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோரஹித், சீசனின் 200வது சிக்சரையும் அடித்துள்ளார். இதைத் தவிர, ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடும் கிறிஸ் கெயில், 102 போட்டிகளில் 269 சிக்சர்கள் அடித்துள்ளார். சிஎஸ்கேவின் சின்ன தல சுரேஷ் ரெய்னா 163 போட்டிகளில் 174 சிக்சர்கள் அடித்துள்ளார். தனது 163வது போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா, 179 சிக்சர்களுடன் தற்போது அதிக சிக்சர் அடித்தோர் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார்.
இந்த நிலையில் மும்பைக்கு பின் பெங்களூரு அணி விளையாடியது. அதில் தனி ஆளாக பெங்களூரு கேப்டன் விராட் கோஹ்லி விளையாடி வருகிறார். அவர், 32 ரன்களை எடுத்தபோது, ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.
இதுவரை, 4558 ரன்களுடன் சிஎஸ்கேவின் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் இருந்தார். இந்தப் பட்டியலில் ரோஹித் சர்மா, 4,345 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். டெல்லி கேப்டன் கவுதம் கம்பூர் 4,210 ரன்களுடன் நான்காவது இடத்தில் உள்ளார்.