தொடர் தோல்விகள்
விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி மிகவும் வெற்றிகரமாகவே செயல்படுகிறது. ஒருநாள் போட்டியில் அவரின் வெற்றி சதவீதம் 70 ஆகவும், டி20 போட்டிகளில் 64 சதவீதமாகவும் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்தவர் என்ற புகழ் உள்ளது. எனினும் அவரின் வெற்றி ஃபார்முலா ஐசிசி தொடர்களில் மட்டும் ஏமாற்றம் அளிக்கிறது.
3 முறை சொதப்பல்
கோலியின் கேப்டன்சியில் இதுவரை 3 ஐசிசி தொடர்களில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. இதில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரும் ஒன்றாகும். இந்த 3 தொடர்களிலுமே இந்திய அணி கடைசி வரை சென்று ப்ளே ஆஃப் சுற்றுகளில் வெளியேறி ஏமாற்றம் அளிக்கிறது. அதிலும், கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் என 2 முறை நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது.
விமர்சனங்கள்
இதனால் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மற்றொரு புறம் இந்திய அணிக்கு 3வடிவ கிரிக்கெட்டிற்கும் தனித்தனியாக கேப்டன்கள் நியமிக்கப்பட வேண்டும் என கோரி வருகின்றனர். உலகில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகள் தனித்தனியாக கேப்டன்களை வைத்துள்ளது. ஆனால் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மட்டுமே அனைத்து வடிவ போட்டிகளுக்கும் ஒரே ஒரு கேப்டன்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளது.
கோலிக்கு கெடு
இந்நிலையில் கோலியின் கேப்டன்சி சர்ச்சைக்கு சாபா கரீம் பதிலளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அடுத்து வரும் டி20 உலகக்கோப்பை விராட் கோலிக்கு மிக முக்கியமானது. அவர் இதுவரை ஐசிசி கோப்பையை வென்று தரவில்லை என்பதால் அழுத்தம் அதிகம் உள்ளது. எனவே அவர் டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்துவிட்டால் கேப்டன் பதவியில் அவர் நினைக்கும் வரை நீடிக்கலாம். ஆனால் அதிலும் தோற்றுவிட்டால், அவர் கேப்டன் பதவியில் இருப்பது கேள்விக்குறியாகும், குறிப்பாக ஒவ்வொரு வடிவ போட்டிக்கும் தனித்தனி கேப்டன்கள் நியமிக்கப்படலாம் எனக்கூறியுள்ளார்.