ஒருநாள் தொடர்
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோத இருந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் கொரோனா வைரஸ் பரவிய நேரத்தில் திட்டமிடப்பட்டு இருந்தது. தரம்சாலாவில் நடைபெற இருந்த முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது.
லக்னோ போட்டி
இரண்டாவது ஒருநாள் போட்டி லக்னோவில் நடைபெற இருந்தது. அதில் பங்கேற்க இந்தியா - தென்னாப்பிரிக்கா வீரர்கள் லக்னோ சென்றனர். எனினும், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அந்த ஒருநாள் தொடரை பாதியில் கைவிடுவதாக அறிவித்தது பிசிசிஐ.
தென்னாப்பிரிக்கா செல்ல தாமதம்
அதனால், தென்னாப்பிரிக்க அணி லக்னோவில் ஹோட்டலில் சில நாள் தங்கி இருந்து, மூன்றாவது ஒருநாள் போட்டி நடக்க இருந்த கொல்கத்தாவுக்கு சென்று, பின் தங்கள் நாட்டுக்கு கிளம்பியது. இதனிடையே தான் அவர்கள் கொரோனா பாதிப்பு அபாயத்தில் சிக்கி உள்ளனர்.
பாலிவுட் பாடகி
லக்னோ ஹோட்டலில் தென்னாப்பிரிக்க வீரர்கள் தங்கி இருந்த அதே நேரத்தில் தான், பாலிவுட் பாடகி கனிகா கபூர் தங்கி இருந்தார். அவர் லண்டனில் இருந்து மும்பை வந்த போது, கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளவில்லை.
பல நூறு பேர்
பின் அவர் லக்னோ சென்று, அங்கே அந்த ஹோட்டலில் தங்கி இருக்கிறார். அங்கே நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு, ஹோட்டல் பஃப்பேயில் உணவருந்தி உள்ளார். அந்த ஹோட்டலில் தென்னாப்பிரிக்க வீரர்கள் உட்பட பல நூறு பேர் இருந்துள்ளனர்.
கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு
பின்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது கண்டறியப்பட்டது. அதனால், அந்த ஹோட்டலில் தங்கி இருந்தவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. தென்னாப்பிரிக்க வீரர்களும் அந்த அபாயத்தில் தான் உள்ளனர்.
கொரோனா அபாயம்
தென்னாப்பிரிக்க வீரர்கள் கிரிக்கெட் ஆட வந்து, அதையும் முழுமையாக ஆடாமல், தொடர் ரத்து செய்யப்பட்ட உடனே நாட்டுக்கும் திரும்ப முடியாமல் காத்திருந்து தங்கள் நாட்டிற்கு திரும்பி, தற்போது கொரோனா தொற்று அபாயத்திலும் சிக்கி உள்ளனர்.
சிசிடிவி ஆய்வு
தற்போது அந்த ஹோட்டலின் சிசிடிவிக்களை ஆரய்ந்து கனிகா கபூர் யார், யாரை எல்லாம் தொடர்பு கொண்டார், அவர் பயன்படுத்திய இடங்கள் எவை, அதில் யாரெல்லாம் அவருக்கு பின் சென்றார்கள் என சோதனை செய்யப்பட்டு வருகிறது.
தென்னாப்பிரிக்கா அணி நிலை
தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு இந்த செய்தி இந்நேரம் எட்டி இருக்கும். அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஒருவேளை அவர்களில் யாருக்கேனும் கொரோனா பாதிப்பு இருந்தால் அது இந்தியாவுக்கு கெட்ட பெயரை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கனிகா கபூரால் அச்சம்
காரணம், கனிகா கபூர் விமான நிலையத்தில் அதிகாரிகளை ஏமாற்றி கொரோனா பரிசோதனை செய்து கொள்ளாமல் நாட்டுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அவரால் வசுந்தரா ராஜே, ஜனாதிபதி மற்றும் பல எம்பிக்கள் கொரோனா தொற்று அபாயத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.