ஸ்டீவ் எழுதியிருக்கும் புத்தகம்
ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிரான தொடரை முடித்து விட்டு நவம்பர் இறுதியில் நடக்க இருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 'ஆஷஸ்' தொடருக்காக காத்துக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அவரது வாழ்க்கை வரலாற்றை 'மை ஜேர்னி' என் புத்தகமாக எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தை வெளியிட்டு பேசிய ஸ்டீவ் ஸ்மித் அதில் இடம்பெற்றிருக்கும் மிக முக்கியமான பகுதிகளை குறித்து பேசினார். இந்தப் புத்தகத்தில் கோஹ்லி, ஸ்டீவ் ஸ்மித் இடையே நடந்த சண்டை பற்றி எழுதப்பட்டது இருப்பதாக கூறப்படுகிறது.
கோஹ்லி ஸ்டீவ் ஸ்மித் இடையே சண்டை
சென்ற மார்ச் மாதம் இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டியில் பெரிய பிரச்சனை ஒன்று ஏற்பட்டது. பெங்களூரில் நடந்த அந்த போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் அவுட் ஆன பின் ரிவ்யூ கேட்கலாமா வேண்டாமா என்பதை ட்ரெஸ்ஸிங் அறையில் இருக்கும் அணி வீரர்களிடம் சிக்னல் காட்டி கேட்டார். இதையடுத்து அது தவறு என கோஹ்லி அவரிடம் சண்டை போட்டார். இந்த பிரச்சனையை நடுவர் தீர்த்து வைத்து ஸ்டீவ் ஸ்மித்தை வெளியேறும்படி கூறினார்.
விவாதிக்கப்பட்ட பிரச்சனை
இந்த நிலையில் கோஹ்லி பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அருவெறுப்பாக நடந்து கொள்வதாக கூறினார். மேலும் பிசிசிஐயால் ஸ்டீவ் ஸ்மித் மீது ஐசிசியில் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து ஆஸ்திரேலிய வாரியமும் கோஹ்லி மீது புகார் அளித்தது. இந்த பிரச்சனை பெரிதாக வேண்டாம் என பின்னர் முடிவு எடுக்கப்பட்டு கடைசியில் சுமுகமாக பேசி தீர்க்கப்பட்டது.
கோஹ்லி அப்படி சொல்லியிருக்க கூடாது
இந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் தனது புத்தகத்தில் "கோஹ்லி அன்று அப்படி 'அருவெறுப்பு' என்று கூறியது தவறு. நாங்கள் அப்படி செய்யவில்லை. கோஹ்லி மிகவும் கோபக்காரராக இருக்கிறார். ஆனால் அதற்கு அடுத்த நாளே கோஹ்லி சாதாரணமாக வந்து எங்களிடம் பேசினார். அவரால் எப்படி இது போல நடந்து கொள்ள முடிகிறது என்று தெரியவில்லை. அவரின் அந்த செயல் குறித்து அவர் இன்று வரை எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை.'' என நிறைய பக்கங்களுக்கு கோஹ்லி குறித்தும், இந்திய அணி குறித்தும் அவர் எழுதி இருக்கிறார்.