தோனி ஓய்வு முடிவு
தோனி 2019 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்குப் பின் ஓய்வு பெறப் போவதாக வதந்திகள் பரவியது. ஆனால், தோனி ஓய்வு அறிவிக்கவில்லை. மாறாக இந்திய அணியில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.
நீண்ட விடுப்பு
ஜூலை 2019 முதல் தோனி விடுப்பில் இருக்கிறார். முதலில் இரண்டு மாத விடுப்பு என கூறப்பட்ட நிலையில், ஆறு மாத காலத்திற்கும் மேலாக அவர் விடுப்பு நீண்டு கொண்டே சென்று இருக்கிறது.
காரணம் தெரியவில்லை
தோனி ஏன் இந்திய அணியில் ஆடாமல் விலகி இருக்கிறார் என்பது குறித்த காரணம் இன்று வரை மர்மமாகவே உள்ளது. பிசிசிஐ தலைவர் கங்குலி, கேப்டன் விராட் கோலி என யாருமே அது குறித்து சரியான பதிலை அளிக்கவில்லை.
உடற்தகுதி காரணமா?
தோனியின் உடற்தகுதி முன்பு போல இல்லை என்பதால் தான் அவர் ஒதுங்கி இருப்பதாகவும் ஒரு தகவல் உள்ளது. 2019 ஐபிஎல் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த உலகக்கோப்பை தொடரில் அவர் சிறு காயங்கள் மற்றும் முதுகில் நரம்புப் பிரச்சனை ஆகியவற்றோடு தான் பங்கேற்றார்.
அணி நிர்வாகம் முடிவு என்ன?
தோனி மீண்டும் இந்திய அணிக்கு ஆட விரும்பினாலும் இந்திய அணி நிர்வாகம் அவரை நேரடியாக அணியில் சேர்த்துக் கொள்ளாது என நம்பப்படுகிறது. அது குறித்து தேர்வுக் குழு மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளனர்.
ஐபிஎல் தான் ஒரே வழி
தோனி 2020 ஐபிஎல் தொடரில் அசத்தல் பார்மில் இருந்தால் மட்டுமே இந்திய அணிக்கு திரும்ப முடியும் என கூறப்படுகிறது. தோனி 2020 ஐபிஎல் தொடரில் நிச்சயம் ஆடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
கவாஸ்கர் விமர்சனம்
இந்த நிலையில் தான் முன்னாள் இந்திய அணி கேப்டன் கவாஸ்கர், தோனியின் நீண்ட விடுப்பு குறித்து கடுமையாக கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார். இதற்கு முன் இப்படி யாராவது இப்படி செய்திருக்கிறார்களா? என அவர் கேட்டுள்ளார்
உடற்தகுதி பற்றி பேசமாட்டேன்
இது பற்றி கூறுகையில், "நான் (தோனியின்) உடற்தகுதி பற்றி எதுவும் கூறமாட்டேன். ஆனால், ஒரு கேள்வியை நாம் தோனி குறித்தே கேட்க வேண்டும் என நான் நினைக்கிறேன்" என்றார் கவாஸ்கர்.
யாராவது இப்படி செய்திருக்கிறார்களா?
"அவர் ஜூலை 10 முதல் இந்தியாவுக்காக ஆட தயாராக இல்லை. அது தான் முக்கியமான விஷயம். யாராவது இந்திய அணிக்கு ஆடுவதில் இருந்து இத்தனை காலம் விலகி இருந்திருக்கிறார்களா? அது தான் கேள்வி. பதிலும் அதற்குள்ளேயே அடங்கி உள்ளது" என்று கடுமையாக சாடினார் கவாஸ்கர்.
தோனி நிலை
கவாஸ்கர் கூறுவது போல தோனி இந்திய அணிக்கு ஆட தயாராக இருந்தாலும், தேர்வுக் குழு அவரை தேர்வு செய்ய தயாராக உள்ளதா? என்ற சந்தேகமும் உள்ளது. ஐபிஎல்-இல் தோனி தன்னை நிரூபிக்க வேண்டும். அது மட்டும் தான் அவர் மீண்டும் அணிக்கு திரும்ப இருக்கும் ஒரே வழி!