சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ் கடந்த சில ஆண்டுகளாகவே மும்பை மாநில அணியிலும், மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியிலும் சிறப்பாக ஆடி வருகிறார். அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என பலரும் கூறி வந்தனர்.
மூன்றாம் இடம்
இந்த நிலையில் அவர் 2020 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி வந்தார். தொடரின் முடிவில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 480 ரன்களுடன் ஏழாம் இடத்தை பிடித்தார். ரன்கள் எடுத்ததை காட்டிலும் அவரால் மும்பை அணி சில போட்டிகளில் தோல்வியை வெற்றியாக மாற்றி இருந்தது.
இந்திய அணி எதிர்பார்ப்பு
அணியை தனி ஆளாக சுமந்து செல்லும் ஆற்றல் பெற்ற அந்த வீரரை நிச்சயம் பிசிசிஐ இந்திய அணிக்கு தேர்வு செய்யும் என விமர்சகர்கள் முதல் ரசிகர்கள் வரை எதிர்பார்த்தனர். ஆனால், அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. மீண்டும் அவர் பிசிசிஐ-யால் புறக்கணிக்கப்பட்டார்.
பெரும் ஏமாற்றம்
இது பற்றி ஒரு பேட்டியில் பேசி உள்ளார் சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது தான் மிகவும் ஏமாற்றம் அடைந்ததாக கூறி உள்ளார். தான் நன்றாக பேட்டிங் ஆடி வந்ததாலும், நல்ல ஸ்கோர் எடுத்து இருந்த நிலையில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என கருதியதாக அவர் கூறினார்.
ஐபிஎல் மட்டுமில்லை
குறைந்த ஓவர் போட்டிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தான் நிறைய ரன்கள் குவித்து வந்ததாகவும், ஐபிஎல் மட்டுமில்லாமல் உள்ளூர் போட்டிகளிலும் தான் சிறப்பாக ரன் குவித்ததையும் சுட்டிக் காட்டினார் சூர்யகுமார் யாதவ்.
என்ன நடந்தது?
இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது தான் ஜிம்மில் பயிற்சி செய்து கொண்டு இருந்ததாகவும் தேர்வு பற்றி சிந்திக்காமல் இருக்க தான் முயற்சி செய்து வந்ததாகவும் கூறினார். ஆனால், அணித் தேர்வு பற்றி அறிந்த போது தன்னால் உடற்பயிற்சிகளை கூட செய்ய முடியாமல் ஏமாற்றத்தில் தவித்ததாக கூறினார்.
சாப்பிடவில்லை
இந்திய அணியில் எந்த இடத்திலாவது தனக்கு வாய்ப்பு கிடைக்குமா? என தான் எண்ணி வருந்தியதாகவும், அன்றைய இரவு உணவு கூட உண்ணாமல், யாரிடமும் பேசாமல், தனிமையில் இருந்ததாகவும் குறிப்பிட்டார் சூர்யகுமார் யாதவ். அதற்கு அடுத்த ஐபிஎல் போட்டி சூடான போட்டியாக அமைந்தது.
விராட் கோலி சர்ச்சை
இந்திய அணி கேப்டன் கோலியின் பெங்களூர் அணிக்கு எதிராக நடந்த அந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தனி ஆளாக மும்பை அணியை வெற்றி பெற வைத்தார். அந்தப் போட்டியில் கோலி - சூர்யகுமார் இடையே சீண்டல்கள் நடந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
லைக் செய்தார்
தன்னை அணியில் தேர்வு செய்யாததால் சூர்யகுமார் யாதவ் அதற்கு பதிலடி கொடுத்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், சில நாட்கள் முன்பு கோலியை பேப்பர் கேப்டன் என கூறி இருந்த மீமை அவர் லைக் செய்ததும் சர்ச்சை ஆனது. பின்னர் அவர் அதை டிஸ்லைக் செய்தார்.
கோலிக்கு எதிரான மனநிலை?
இந்த நிலையில்தான், சூர்யகுமார் யாதவ் தான் அணியில் தேர்வு செய்யாததால் பாதிக்கப்பட்டதை பற்றி கூறி இருக்கிறார். அதனால் தான் அவர் விராட் கோலிக்கு எதிரான மனநிலையில் இருக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.